அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (09) முற்பகல் 8 மணி முதல் 48 மணித்தியாலங்களுக்கு நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளது.

சுகாதார அமைச்சு இணக்கம் தெரிவித்த நிபந்தனைகளை மீறி, பயிற்சிக்கு பிந்தைய வைத்திய நியமனங்களை வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சினால் பயிற்சிக்கு பிந்தைய வைத்திய நியமனங்களுக்காக விண்ணப்பித்திருந்த 436 புதிய வைத்திய அதிகாரிகளுக்கான நியமன இடங்கள் நேற்று (08) அறிவிக்கப்பட்டன.
அதற்கமைய, அவர்கள் இன்று முதல் வரும் 11 ஆம் திகதிக்குள் தமக்கு ஒதுக்கப்பட்ட அரச வைத்தியசாலைகள் அல்லது சுகாதார நிறுவனங்களில் பணியில் இணைய வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது.
எவ்வாறாயினும், சுகாதார அமைச்சின் இந்தச் செயற்பாடானது தமது சங்கத்துடன் எட்டப்பட்ட உடன்படிக்கைகளை மீறும் செயல் என அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாகவே இன்று முதல் 48 மணிநேரத்திற்கு நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக அந்தச் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்தார்.