எதிர்வரும் 12 ஆம் திகதி இலங்கை ஆசியர் சங்கத்தினரால் நாடளாவிய ரீதியான பணிபகிஷ்கரிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நேற்று (24) யாழ்ப்பாணத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடளாவிய ரீதியில் தற்போதைய அரசாங்கத்தின் பிரதமர் முன்னெடுக்கும் கல்விக் கொள்கைகள் ஆசிரியர்கள் மற்றும் கல்வி சமூகத்திடம் கலந்துரையாடாமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாக குற்றம் சுமத்திய ஜோசப் ஸ்டாலின், பாடசாலைகளின் நேரத்தை இரண்டு மணிவரை நடாத்துவது தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட முடிவும் தவறான தீர்மானம்.
அத்துடன் பாடசாலை நேரத்தை அதிகரிக்கும் போது முஸ்லிம் பிள்ளைகள் வெள்ளிக்கிழமைகளில் பாதிப்பிற்குள்ளாகும் நிலை ஏற்படும். மேலும் இம்முறை அரசாங்கம் கல்விக்காக ஒதுக்கும் தொகையும் மிக சொற்பமான நிலையில் இந்த விடயங்கள் தொடர்பாக பாராளுமன்றில் வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவபடுத்தும் உறுப்பினர்கள் கூட எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்காமை கவலையளிக்கின்றது.
மேலும் ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படாமை, மற்றும் சுபோதினி அறிக்கையிலும் விடயங்கள் இன்னமும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவும் இது தொடர்பாகவே தமது பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது என தெரிவித்தார்.