சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரம் ஒன்று மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் , மோட்டார் சைக்கிள் ஓட்டியான இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தினை ஏற்படுத்திய உழவு இயந்திரம் தப்பி சென்றுள்ள நிலையில் கொடிகாம பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விபத்தில் மிருசுவிலை சேர்ந்த நந்தகுமார் ஜெயலக்சுமி (வயது 46) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஓட்டியான கனகலிங்கம் செந்தூரன் (வயது 22) எனும் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொடிகாமம் கச்சாய் பகுதியில் இருந்து சட்டவிரோதமான மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரம் வேக கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை மோதி விட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்ததை அடுத்து தப்பி சென்ற உழவு இயந்திரத்தை கைப்பற்றவும் அதன் சாரதியை கைது செய்யவும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.