பல்வேறு காரணிகளால் இடம்பெயர்ந்தவர்களை அவர்களின் சொந்தக் காணிகளிலேயே மீள் குடியேற்ற வேண்டும் என்ற கொள்கைகளுடனேயே அரசாங்கம் செயற்படுகின்றது . யாழ். மாவட்டத்தில் விடுவிக்கப்படாமல் இருக்கும் பொதுமக்களின் காணிகளை முறையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) நடைபெற்ற அமர்வின் போது இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரனால் வலிகாமம் வடக்கில் இதுவரை விடுவிக்கப்படாமல் இருக்கும் பொதுமக்களின் காணிகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
யாழ். மாவட்டத்தில் வலிகாமம் வடக்கில் 2010ஆம் ஆண்டில் 12,376 குடும்பங்களை நேர்ந்த 42699 பேர் இடம்பெயர்ந்தவர்களாக பதிவு செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் 10981 குடும்பங்களை சேர்ந்த 38693பேர் மீள் குடியேற்றப்பட்டிருந்தனர்.
எனினும் 1395 குடும்பங்களை சேர்ந்த 4006 பேர் மீள்குடியேற்றப்படாமல் இருக்கின்றனர்.இதேவேளை 2009 காலத்தில் 23850 ஏக்கர் காணி முப்படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தன.
அவற்றில் பெரும்பாலான பகுதி விடுவிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது 2583 ஏக்கர் பகுதி விடுவிக்கப்பட வேண்டியுள்ளது.
எவ்வாறாயினும் இடம்பெயர்ந்த அனைவரையும் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும் என்ற கொள்கையிலேயே அரசாங்கம் செயற்படுகின்றது.
இதன்படி சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஊடாக அந்த காணிகளை மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
அதேபோன்று மயிலிட்டி மீன்பிடி துறைமுகம் போன்ற தேசிய பொருளாதாரத்திற்கு முக்கியமான இடங்களை அபிவிருத்தி செய்யும் பணிகளிலும் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அங்கு மூடப்பட்டிருந்த வீதிகளும் திறக்கப்பட்டுள்ளன.
இந்த அரசாங்கம் வடக்கு மக்களுக்காக வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக பெருமளவு நிதிகளை ஒதுக்கியுள்ளது. அங்கு பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது என்றார்.