2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரவு செலவுத் திட்டத்தின் போதான வாக்களிப்பினை புறக்கணிக்குமாறு கருணா குழுவினர் தன்னை அச்சுறுத்தி மட்டக்களப்பு பிரபல பெண்கள் பாடசாலை மாணவியான தனது மகளை கடத்த முயற்சித்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த அச்சுறுத்தலினையும் மீறி தான் தொடர்ந்து வரவு செலவுத்திட்டத்தின் முதலாவது வாக்கெடுப்பில் கலந்துகொண்டமையினால் அரசாங்க உத்தியோகத்தரான தனது சகோதரனை கடத்தி மட்டக்களப்பில் மறைத்துவைத்து தன்னை அச்சுறுத்தியமையினால் குடும்பத்தினரின் அழுத்தத்தினால் இரண்டாவது வாக்கெடுப்பினை புறக்கணித்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 வெளிப்படுத்திய காணொளி தொடர்பில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.