தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய இன்று வியாழக்கிழமையுடன் ஓய்வு பெறவுள்ளதாக அறிய முடிகின்றது.
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகின்றது.
புதிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் எதிர்வரும் வாரமளவில் நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட 20ஆவது திருத்த சட்டத்திற்கு அமைய இந்த நியமனங்கள் இடம்பெறவுள்ளன.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய உள்ளிட்ட மூவர் இந்த குழுவில் அங்கம் வகித்தனர்.
பேராசிரியர் ரட்ணஜீவன் ஹல் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நலின் அபேசேகர ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான பின்னணியில் 20ஆவது திருத்தத்தின் ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிவு தான் ஓய்வு பெறவுள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தார்.
எனினும், புதிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை தாம் அந்த பதவியை வகிக்க முடியும் என மஹிந்த தேசபிரிய அண்மையில் கூறியிருந்தார்.
எவ்வாறாயினும், தான் இந்த பதவியில் தொடர்ந்தும் இருக்க போவதில்லை எனவும் மஹிந்த தேசபிரிய தெரிவித்திருந்தார்.
மகிந்த தேசப்பிரிய மிகவும் பிரபலமான அரச அதிகாரி என்பதுடன் ஊடகங்களுடன் மிகவும் நடபுறவுடன் இருந்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.