மிகப் பலத்த மழைவீழ்ச்சி – மக்களே அவதானம்!!

நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு தெற்காக காணப்படும் வளிமண்டலத் தளம்பல் நிலையானது தெற்கு கடற்பரப்புகள் ஊடாக நாட்டிற்கு மேற்காக காணப்படும் கடற்பரப்புகளைநோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.

இத்தொகுதியின் தாக்கம் காரணமாக குறிப்பாக ஊவா, தென், மேல், வடமே, மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை நாளைவரை நீடிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா, தென், மேல், வடமேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 150-200 மி.மீ. அளவான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ. க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்றும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related Posts