Ad Widget

8 கோடி பெறுமதியான புனரமைப்பு வேலையை நிறுத்திய மாநகர முதல்வர் ஆனோல்ட்!! வன்மையாக கண்டிக்கும் மணிவண்ணன்!!

யாழ். கஸ்தூரியார் வீதிக்கு மத்தியில் உள்ள நகரக் குளத்தை, தனியார் நிறுவனமொன்றின் 8 கோடி பெறுமதியான நிதிப்பங்களிப்பில் புனரமைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட அனைத்து பணிகளையும் நிறுத்துமாறு யாழ். மாநகர முதல்வர் ஆனோல்ட் இன்று உத்தரவிட்டதை, யாழ்.மாநகர சபையின் முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் வன்மையாக கண்டித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அண்மையிலே யாழ். நகர மத்தியில் ஸ்ரான்லி வீதி – கஸ்தூரியார் வீதிக்கு மத்தியில் உள்ள நகரக் குளத்தை புனரமைப்புச் செய்வதற்காக தனியார் நிறுவனமொன்றின் 8 கோடி பெறுமதியான நிதிப் பங்களிப்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு புனரமைப்புப் பணிகளுக்காக அடிக்கல் நாட்டப்பட்டது யாவருமறிந்த விடயமே.

இந் நிலையிலே எமது ஆட்சியைக் கவிழ்த்து உள்ளூராட்சி ஆணையாளராலே தெரிவு செய்யப்பட்ட சட்டவிரோதமான முதல்வர் இன்று சட்டவிரோதமாகச் சபையைக் கூட்டி தீர்மானமொன்றை எடுத்ததாகக் கேள்விப்பட்டோம்.

ஒரு முதல்வர் பதவியெடுத்தவுடன் நல்ல விடயங்களை முன்னெடுக்காமல் செய்யும் காரியங்களை நாம் சுட்டிக் காட்ட வேண்டும். அதாவது 8 கோடி செலவில் புனரமைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட அனைத்து பணிகளையும் நிறுத்துமாறு தீர்மானமெடுத்திருந்தார்.

இவற்றுடன் அண்மையில் கள்ளியங்காட்டு சந்தையில் எமது முயற்சியால் கட்டடமொன்று திறந்து வைக்கப்பட்டது. அதிலே நாட்டப்பட்ட கல்லையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்ற தீர்மானத்தையும் கொண்டு வந்தார்.

நான் முதல்வராக இருந்த போது நாடு பொருளாதார நிலையிலே பாதிக்கப்பட்டிருந்தாலும் தனியார் நிறுவனங்களின் கால்களிலே விழுந்து இவ்வாறான பணிகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வந்தேன்.

ஆனால் யாழ். மாநகர முதல்வல் ஆனோல்ட் முன்னர் முதல்வராக இருந்த போது சட்டவிரோதமாக தனது புதுவீட்டைக் கட்டினார். அது தான் அவர் செய்த விடயம்.

அந்த 8 கோடி பெறுமதியான செயற்திட்டத்தை நிறுத்தியதைப் போல் நான் தனியார் நிறுவனங்களிடம் கெஞ்சி மன்றாடிப் பெற்ற நிதியின் மூலம் கட்டிய ஆரியகுளத்தையும் இடிக்கப் போகின்றாரோ தெரியாது.

சட்டவிரோதமாக இரவோடிரவாக தன் பண செல்வாக்கு மற்றும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி திருட்டுத்தனமாக முதல்வராக வந்தார். இவர் மாநகர சபை உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கினார் என்ற செய்தியும் முகநூல் வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.

அந்த நிலையில் நாங்கள் கடந்த காலங்களில் மேற்கொண்ட ஆக்கபூர்வமான செயற்திட்டங்களைச் சிதைப்பவர்களின் செயற்பாடுகளுக்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவி்த்துக் கொள்கின்றேன்.

எனவே இதை மக்கள் சரியாக புரிந்து கொண்டு எதிர்வரும் தேர்தலில் சட்ட விரோதிகளை நகரத்திலிருந்து அடித்து விரட்ட வேண்டிய தேவைப்பாடு மக்களுக்குக் காணப்படுகின்றது. இதற்கு பொது மக்கள் தக்க பதிலடியை வழங்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டார்.

Related Posts