Ad Widget

53 வயதான வெளிநாட்டவரை திருமணம் செய்யுமாறு வற்புறுத்துவதாக அச்சுவேலி சிறுமி வாக்குமூலம்!

நெதர்லாந்து நாட்டை சேந்த 53 வயதான நபரை திருமணம் செய்யுமாறு தன்னை தனது பெற்றோர் வற்புறுத்தி தாக்கினார்கள் என 15 வயதான சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த சிறுமி பிரான்ஸ் நாட்டில் இருந்து அச்சுவேலிக்கு திரும்பியிருந்த 20 வயதான இளைஞனுடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தலைமறைவாகி இருந்தார்.

அது தொடர்பில் சிறுமியின் பெற்றோரால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக தலைமறைவான சிறுமி மற்றும் இளைஞன் அச்சுவேலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , சிறுமி வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது , சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகவில்லை என தெரியவந்ததை அடுத்து , சிறுமி அச்சுவேலி சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த சிறுமியிடம் பொலிஸார் , சிறுவர் நன்னடத்தை பிரிவினர் உள்ளிட்டவர்கள் முன்னெடுத்த விசாரணையின் போது , தனது பெற்றோர் தன்னை நெதர்லாந்து நாட்டில் வசிக்கும் 53 வயதான நபரை திருமணம் செய்யுமாறு , வற்புறுத்தி , தன்னை தாக்கி வந்ததாகவும் , நெதர்லாந்து நாட்டில் உள்ளவருடன் வீடியோ கோல் மூலம் உரையாடுமாறு வற்புறுத்தினார்கள் எனவும் , அவர் தன்னை நிர்வாணமாக வீடியோ கோலில் உரையாடுமாறு கோரிய போது , தான் அதற்கு மறுத்து பெற்றோரிடம் தெரிவித்த போதும் , அவர்களும் அவருடன் அவ்வாறு உரையாடுமாறு வற்புத்தினார்கள் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனை அடுத்து சிறுமியின் பெற்றோரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

Related Posts