Ad Widget

5 குடும்பங்களுக்கு காணி சுவீகரிப்பு கடிதங்கள் அனுப்பிவைப்பு

யாழ். மாவட்டத்தின், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஜே – 133 கிராம அலுவலர் பிரிவை (கூழாவடி) சேர்ந்த 5 பேரின் 0.3492 ஹெக்டேயர் காணிகள், ஸ்ரீலங்கா இராணுவத்தின் 11 ஆவது சிங்க ரெஜிமென் ‘பி’ அணிக்கான நிலையத்தை அமைப்பதற்காக சுவீகரிக்கப்படவுள்ளதாக காணி உரிமையாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரால் அனுப்பப்பட்டுள்ள இந்த கடிதத்தில், எதிர்வரும் 21 ஆம் திகதி காணிகள் சுவீகரிக்கப்பட்டு, இராணுவத் தேவைக்காக எடுக்கப்படவுள்ளதாகவும் அச்சமயம் காணி உரிமையாளர்கள் வருகை தந்து ஒத்துழைப்பு வழங்குமாறும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 05ஆம் திகதியிடப்பட்டு அனுப்பப்பட்ட கடிதம் காணி உரிமையாளர்களுக்கு நேற்று புதன்கிழமை (07) கிடைத்தது. மரியாம்பிள்ளை சிங்கராசா, சுப்பிரமணியம் தம்பித்துரை, யேசுராசா விக்ரோறியா, இராயப்பு யேக்கப்பு, அம்பலவாணர் சிறி ஆகியோரது காணிகளே சுவீகரிக்கப்படவுள்ளன.

இந்த கடிதத்தின் பிரதி யாழ்.மாவட்டச் செயலக காணி சுவீகரிப்பு அதிகாரிக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் காணிகளை நிலஅளவை செய்வதற்காக கடந்த 2014 ஜூலை மாதம் 17 ஆம் திகதி நிலஅளவையாளர்கள் முயன்றபோது, காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து காணி அளவிடும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது.

Related Posts