Ad Widget

32 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனம்

வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு நடப்பு ஆண்டுக்கான தனது பிரதான செயற்திட்டங்களில் ஒன்றாக புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

32 மில்லியன் ரூபா உத்தேச மதிப்பீட்டைக்கொண்ட இந்த ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று வெள்ளிக்கிழமை (27.06.2014) வட்டக்கச்சி மாயவனூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளார்.

 

3

1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு மலையகத்தில் இருந்து இடம் பெயர்ந்து வந்த மலையகத் தமிழ் மக்களே மாயவனூர் பகுதியில் அதிகம் வசித்து வருகின்றனர்.

அடிப்படை வாழ்வாதார வசதிகள் எதுவும் அற்ற நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கும் இம்மக்களை வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் துறைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கடந்த பெப்ரவரி மாதம் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். மிகுந்த வரட்சி நிலவும் அப்பகுதியில் கிணறுகளில்கூடத் தண்ணியில்லாத நிலையை அம்மக்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். இதையடுத்தே, புழுதியாற்றில் இருந்து மாயவனூருக்கு ஏற்று நீர்ப்பாசனத்தின் மூலம் நீரை விநியோகிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களில் முடிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ள புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனத்தின் மூலம் மாயவனூரில் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளலாம். இதன் மூலம் 150 விவசாயக் குடும்பங்கள் பயனடையவுள்ளன. அத்தோடு இப்பகுதிகளில் உள்ள கிணறுகளில் கணிசமான அளவு நீரின் ஊற்று அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்ச்சியில் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனோடு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடக்கு அமைச்சர்கள் பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா, வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் சு. பசுபதிப்பிள்ளை, ப. அரியரத்தினம், விவசாய அமைச்சின் செயலாளர் யு.எல்.எம்.ஹால்தீன், வடமாகாண நீர்ப்பாசனப்பணிப்பாளர் சோ.சிவபாதம், நீர்ப்பாசனப் பிரதிப்பணிப்பாளர் ந.சுதாகரன் மற்றும் மாயவனூர் பகுதியைச் சேர்ந்த மக்களும் அதிக எண்ணிக்கையில் கலந்துகொண்டிருந்தனர்.

புழுதியாற்றில் இருந்து வெளியேறும் நீர் வீணாகக் கடலில் கலந்துவந்ததால் விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தில் 2001ஆம் ஆண்டு புழுதியாற்றுக்குக் குறுக்காக அணை கட்டப்பட்டு புழுதியாற்றுக் குளம் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

16

15

8

7

1

2

 

4

Related Posts