Ad Widget

20க்கு ஆதரவாக வாக்களித்தவர்களை நீக்கினால் மட்டுமே முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து பயணிப்போம் – சுமந்திரன்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தவர்களை கட்சியில் இருந்து நீக்குவதற்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவித்துள்ள அவர், “20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாரை தமிழ் முற்போக்குக் கூட்டணியில் இருந்து இடைநிறுத்துவதற்கு அக்கட்சியின் தலைவர் மனோ கணேசன் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த முடிவை வரவேற்கின்றோம்.

அதேபோல 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஹக்கீமும் ரிஷாட்டும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் ஹக்கீமும் ரிஷாட்டும் இரட்டை வேடம் போடுகின்றனர் என்ற சந்தேகம் நிரூபணமாகும். அதே போல் இரு தரப்பினருடனும் நாங்கள் இணைந்து பயணிப்பதிலும் சிக்கல் உருவாகும்.

எனவே 20ஐ ஆதரித்தவர்களைக் கட்சியில் இருந்தும் நாடாளுமன்றத்தில் இருந்தும் வெளியேற்ற இரண்டு கட்சித் தலைவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்போதுதான் நாங்கள் முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து தொடர்ந்து பயணிக்க முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts