முழு நாடும் எதிர்பார்த்த 19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.
தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டுவந்த தடைகள் மற்றும் இடையூறுகளையும் மீறி 19ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதம் நேற்று ஆரம்பமானது.
இன்று இரண்டாவதுநாள் விவாதம் நடைபெற்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
19ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழு தீர்மானித்துள்ள நிலையில் எதிர்த்தரப்பின் ஆதரவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இது நிறை வேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதிக்கு இருக்கும் நிறைவேற்று அதிகாரங்களைக் குறைப்பது, சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பது அடங்கலான முக்கியமான சரத்துக்களை உள்ளடங்கிய 19ஆவது திருத்தச்சட்ட மூலத்தின் மீதான விவாதம் நடத்துவதற்கு இதற்கு முன்னர் மூன்று தடவைகள் திகதி குறிப்பிடப்பட்டபோதும் எதிர்த்தரப்பில் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகளையடுத்து விவாதம் தள்ளிப்போடப்பட்டது.
நேற்று விவாதம் ஆரம்பமான நிலையில் இன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவிருக்கிறது.
19ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்திருப்பதால் சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் அடங்கலான 116 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும், ஐ.தே.கவின் 41 உறுப்பினர்களின் ஆதரவும், இலங்கை தமிழரசுக் கட்சியின் 13 எம்பிக்களினது ஆதரவும், ஜனநாயக தேசிய முன்னணியின் மூன்று உறுப்பினர்களின் ஆதரவும் கிடைத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இது நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர ஐ.ம.சு.முவில் அங்கம் வகிக்கும் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவும் 19ஆவது திருத்தத்துக்குக் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
இதேவேளை சில ஐ.ம.சு.முவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் 19ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்கலாம் அல்லது வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.