Ad Widget

17 மாவட்டங்களை எதிரணி வெற்றிக்கொள்ளும் – மனோ கணேசன்!

ஜனாதிபதித் தேர்தலில் 17 மாவட்டங்களில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவே வெற்றிபெறுவார். – இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்.

mano-ganeshan

பொது எதிரணி வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து தெல்தெனிய, நாவலப்பிட்டி, மாத்தளை, கம்பளை, எட்டியாந்தோட்டை, வலப்பனை, ஹங்குரான்கத, பதுரெலிய ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற தொடர் பிரசார கூட்டங்களில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இக்கூட்டங்களில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

கொழும்பு, கம்பஹா, கண்டி, நுவரெலியா, பொலன்னறுவை, அனுராதபுரம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, கேகாலை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில், பொது எதிரணி கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகின்றது. ஏனைய மாவட்டங்களிலும், அரசின் ஆதரவு படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்நிலையில் அடுத்த இரண்டு வாரங்களில் ஏனைய எட்டு மாவட்டங்களையும் வெற்றிக்கொள்ளும் கடுமையான பல்முனை பிரசாரங்களில் நாம் தற்போது ஈடுபட்டுள்ளோம். இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களில் நமது வாக்குப்பலம் அரசை தோற்கடிக்கும். அதேவேளை தமிழ் பேசும் மக்கள் சிறுபான்மையாக வாழும் மாவட்டங்களிலும், நமது வாக்குப்பலம், அரசை தோற்கடிக்க பெருந்துணையாக இருக்கும். இதை நான் செல்லும் இடங்களிலெல்லாம் சிங்கள மக்களுக்கு விளங்கும் விதத்தில் சிங்கள மொழியில் சொல்கிறேன்.

தமிழ், முஸ்லிம் வாக்குகள் இல்லாமல் எதிரணி வெல்ல முடியாது. மலையக மக்களுக்கு, குறிப்பாக தோட்ட தொழிலாளர்களுக்கு வீட்டு காணி உரிமை பற்றி எதிரணியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இன்னமும் பல பிரச்சினைகள் இருந்தாலும் இந்த வீட்டுரிமை, காணியுரிமை பிரச்சினைகளே தோட்ட தொழிலாளர்களின் பிரதான பிரச்சினைகளாகும். எனவே இந்த அடிப்படையில் தோட்ட தொழிலாளர்களின் வாக்குகளை நாம் எதிரணிக்கு வழங்கும்படி கோருகிறோம்.

தங்கள் மத சுதந்திரத்துக்கு விழுந்த அடி, முஸ்லிம் மக்களின் இன்றைய பிரதான பிரச்சினையாகும். இதன்காரணமாக இந்த ஆட்சியை அகற்றுவதில் முஸ்லிம் சகோதரர்கள் முன்னிலை வகிக்கின்றார்கள். முஸ்லிம் அரசியல் கட்சிகள், தங்கள் வாக்காளர்களின் அபிப்பிராயத்தை கணக்கில் எடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றார்கள்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சினைகள் பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு, பொது எதிரணி மற்றும் அரசாங்க முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, இரண்டு தரப்பினரின் தேர்தல் அறிக்கையையும் பரிசீலனையில் எடுப்பார்கள் என நான் நம்புகிறேன்.

இது தொடர்பில் எதிரணியில் உள்ளே இருக்கும் எமது கட்சியுடன் கருத்து பறிமாற்றங்களை கூட்டமைப்பு தலைவரும், தலைமை பொறுப்பில் இருக்கும் ஏனைய முக்கியஸ்தர்களும் நடத்தியுள்ளார்கள். இந்நிலையில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் முடிவை கூட்டமைப்பு தலைவர், நாடு திரும்பிய பிறகு அறிவிப்பார் எனவும் நான் நம்புகிறேன்.

இந்த தேர்தலின் பின்னர் உருவாகக்கூடிய ஆட்சி ஒரு இடைகால ஆட்சியாகவே இருக்கும். இந்த ஆட்சி தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வை தரும் மக்கள் ஆணையை கொண்டிருக்காது. நிறைவேற்று அதிகாரத்தை பாராளுமன்றத்துக்கு மாற்றிய பிறகு, ஒரு தேசிய அரசு உருவாகுமானால் அது இனப்பிரச்சினைக்கான தீர்வை தேடலாம்.

தேசிய அரசுக்கான இணக்கப்பாடு இல்லாவிட்டால் நாம் பொது தேர்தலை சந்திக்கலாம். அதன்பிறகு உருவாகும் அரசு, இனப்பிரச்சினைக்கான தீர்வை தேடும். தமிழ், முஸ்லிம் மக்களை பொறுத்தவரையில், இந்த அரசு அகற்றப்படுவதன்மூலம் ஒரு ஜனநாயக இடைவெளி உடனடியாக ஏற்படும் என்பதையும், அதை அடிப்படையாக கொண்டு நாம் முன்செல்ல வேண்டும் என்பதையும் நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகின்றேன்.- என்றார்.

Related Posts