Ad Widget

13 பிளஸ் 13 மைனஸாக மாறிவிட்டது: சிவாஜிலிங்கம்

Sivaji-lingam13 பிளஸ் பிளஸ் 13 மைனஸ் ஆக மாறிவிட்டதாக தமிழர் விடுதலை இயக்க (ரெலோ) அரசியல் தலைவரும், வடமாகாண சபை உறுப்பினருமான கனகலிங்கம் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று மாலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி 13 பிளஸ் பிளஸ் என தெரிவிக்கின்றார் ஆனால் உண்மையில் தற்போது 13 மைனஸ் மைனஸ் ஆக போய்க்கொண்டிருக்கின்றது. மாகாண சபையில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் இல்லை. மாகாண சபைகள் மிகவும் பலவீனமாக இருக்கின்றன.

இதனால் எமக்கு பலன் இல்லை என்று காட்டும் போது, சர்வதேசம் அடுத்த கட்டத்திற்காக எங்களுக்கு உதவி செய்யும்.

அத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்தது, ஆனால் தமிழரசு கட்சி மட்டும் தனது ஆதிக்கத்தினை செலுத்தி வருகின்றது. இதற்காக அக்கட்சியை முழுமையாகக் குறைகூறவில்லை, அக்கட்சியில் இருக்கும் தனிப்பட்ட நபர்கள் சிலர் அந்த கட்சியை ஆளுகின்றனர்.

அதன் விளைவாக தான் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதிக்கு முன்னால் பதவிப்பிரமாணம் என்ற பிரச்சினை உருவாகியது.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு, புலம்பெயர் மற்றும் இந்தியத் தமிழர்களை புறந்தள்ளினால், இலங்கை அரசாங்கம் எங்களைப் புறந்தள்ளிவிடும் இதனால் நாம் புலம்பெயர் தமிழர்களுடனும் இந்திய தமிழர்களுடனும் ஐக்கியப்பட்டிருக்க வேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.

Related Posts