Ad Widget

 எனக்கு அழைப்பில்லை: மஹிந்த

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுமாறு தனக்கு இதுவரையிலும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

mahinda_rajapaksa

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பியை பார்வையிட்டதன் பின்னர், அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடமே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நான், திஸ்ஸ அத்தநாயக்க, பிரேமலால் ஜயசேகர ஆகியோரை பார்வையிடுவதற்கே வருகைதந்தேன். ஜயசேகரவை குருவிட்ட சிறைச்சாலைக்கு கொண்டுசென்றுவிட்டனர். திஸ்ஸவை பார்த்தேன். அவ்விடத்தில் கடற்படையைச்சேர்ந்த அமரவீரர் என்பவர் இருக்கின்றார். துப்பாக்கியை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டிலேயே அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர், தன்னுடைய உத்தியோகபூர்வ துப்பாக்கியையே வைத்திருந்துள்ளார். அவ்விருவரையும் நான் பார்த்தேன்.

பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுமாறு எனக்கு அழைப்பு விடுக்கவில்லை. எனக்கு அதுதொடர்பில் எதுவுமே தெரியாது. எங்கே கூட்டம் நடைபெறுகின்றது என்று எனக்கு தெரியாது. கிராமத்திலிருந்து நான் இன்றுதான் வந்தேன்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சவாலாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக களமிறக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய, மக்கள் ஐக்கிய முன்னணி மற்றும் இடதுசாரி முன்னணி ஆகியன இணைந்து கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts