Ad Widget

ஹரிஸ்ணவி பாலியல் துஷ்பிரயோக கொலை வழக்கு: சந்தேக நபருக்கு பிணை

வவுனியா சிறுமி கங்காதரன் ஹரிஸ்ணவியின் பாலியல் துஷ்பிரயோக கொலை வழக்கின் சந்தேக நபராகிய பாலசிங்கம் ஜனார்த்தனனுக்கு வவுனியா மேல் நீதிமன்றம் புதனன்று அரச தரப்பு சட்டவாதியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கியுள்ளது.

ஆறு மாதங்களாக இந்த சந்தேக நபர் எதுவித குற்றச்சாட்டுக்களுமின்றி விளக்கமறியலில் இருந்து வருகிறார் எனத் தெரிவித்து அவரைப் பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கோரி வவுனியா மேல் நீதிமன்றத்தில் அவர் சார்பில் பிணை விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் அந்தப் பிணை விண்ணப்பம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அவருக்குப் பிணை வழங்கக் கூடாது என அரச சட்டத்தரணி கடும் ஆட்சேபனை வெளியிட்டார்.

கடந்த பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்தபோது, சிறுமி கங்காதரன் ஹரிஸ்ணவி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஹரிஸ்ணவியின் வீட்டுக்கு அருகில் மெக்கானிக் கடை வைத்திருந்த பாலசிங்கம் ஜனார்த்தனன் என்பவரை பொலிஸார் பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி கைது செய்து, அவருக்கு எதிராக வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

கடந்த 6 மாதங்களாக அந்த சந்தேக நபர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய விளக்கமறியலில் இருந்து வருகின்றார்.

இவருக்கு எதிரான சுருக்கமுறை வழக்கு விசாரணை முடிவடையவுமில்லை. இந்த வழக்கில் மரபணு பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அந்தப் பரிசோதனை அறிக்கை இன்னும் நீதிமன்றத்திற்கு வந்து கிடைக்கவில்லை என தெரிவித்து வழக்கு தாமதமடைந்துள்ளது. என சந்தேக நபரின் சார்பில் நீதிமன்றத்தில் பிணை விண்ணப்பம் தாக்கல் செய்த சட்டத்தரணி தெரிவித்து, சந்தேக நபருக்குப் பிணை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த வழக்கில் மாணவியான சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்தின் பின்னர் கொலை செய்யப்பட்டிருக்கின்றமை பாரதூரமான ஒரு விடயம்.

இந்தச் சிறுமிக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது. இந்தச் சம்பவத்திற்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என ஊடகங்களிலும் செய்திகளில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.

எனவே, வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான மரபணு பரிசோதனை அறிக்கை எதிர்பார்க்கப்பட்டிருக்கும் நிலையில் சந்தேக நபருக்கு பிணை வழங்கப்படக் கூடாது என அரச தரப்பில் வழக்குத் தொடுநர் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி நிசாந்த் நாகரட்ணம் கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.

இதனை செவிமடுத்த வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், அரச சட்டத்தரணியின் கடும் ஆட்சேபனைக்கு மத்தியிலும், இந்த பிணை விண்ணப்பத்திற்கு பிணை வழங்கப்படுகின்றது என தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

இந்த வழக்கில் தொடர்புடைய சந்தேக நபர் 6 மாதங்களாக விளக்கமறியலில் இருந்து வருகின்றார் என்பதாலும், குற்றச்சாட்டு ஒன்று நிரூபிக்கப்படும் வரையில் எந்த ஒரு நபரும் சுற்றவாளியே என்ற காரணத்தினாலும், இந்த சந்தேக நபருக்குப் பிணை வழங்கப்படுகின்றது. இந்த வழக்கில் சிறிய விடயங்களையும் பெரிதுபடுத்தி அந்தந்த நேரத்திற்காக செய்தி வெளியிடும் ஊடகங்களில் இந்த வழக்கு சம்பந்தப்பட்ட சம்பவம் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதற்காக இந்த வழக்கில் சந்தேக நபருக்கு பிணை மறுக்க முடியாது.

வழக்குகளில் பிணை வழங்க வேண்டியது மேல் நீதிமன்றத்தின் உரிமையாகும். பிணை மறுக்கப்படுவதற்கு விதிவிலக்கான காரணங்கள் இருக்க வேண்டும். அத்தகைய காரணங்களின் அடிப்படையிலேயே பிணை மறுக்கப்பட வேண்டும். இந்த பிணை மனு வழக்கில் அத்தகைய விதிவிலக்கான காரணம் எதனையும் இந்த நீதிமன்றம் காணவில்லை. எனவே சந்தேக நபருக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கப்படுகின்றது என நீதிபதி சசி மகேந்திரன் தெரிவித்தார்.

இரண்டு லட்சம் ரூபா காசுப் பிணையிலும், தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் சந்தேக நபரைச் செல்வதற்கு உத்தரவிட்ட நீதிபதி ஒவ்வொரு சனிக்கிழமையும் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பொலிஸ் அலுவலகத்தில் காலை 9 மணிக்கும் பகல் 12 மணிக்கும் இடையில் கையெழுத்திட வேண்டும் எனவும், அவரிடம் கடவுச் சீட்டு இருக்குமானால், அதனை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளார்.

Related Posts