Ad Widget

வேலணை பிரதேச செயலகத்துக்கான புதிய கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்

யாழ்ப்பாணம் தீவகம் தெற்கு வேலணை பிரதேச செயலகத்துக்கான புதிய கட்டிடத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து பொதுமக்களின் சேவைக்காக கையளித்துள்ளார்.

தீவகத்தின் வேலணைக்கு ஜனாதிபதி அவர்கள் இன்றைய தினம் (14) விஜயம் மேற்கொண்டு புதிய பிரதேச செயலகத்தை திறந்து வைத்தார்.

velanai-1

முன்பதாக பிரதான வாயிலில் மங்கள வாத்தியம் சகிதம் ஜனாதிபதி அவர்கள் அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து நினைவுக்கல்லை திரைநீக்கம் செய்து வைத்தார்.

தொடர்ந்து புதிய கட்டிடத்தை சுபநேரத்தில் ஜனாதிபதி அவர்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

மங்கள விளக்கேற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய கட்டிடத்தின் தொகுதிகளைப் பார்வையிட்ட ஜனாதிபதி அவர்கள் விசேட அதிதிகளின் பதிவேட்டிலும் கையொப்பமிட்டார்.

தொடர்ந்து கிராம சேவையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொது முகாமைத்துவ உதவியாளர்கள் ஆகியோருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

velanai-2

இந் நிகழ்வில் அமைச்சர்களான ஜோன் செனவிரட்ன, டக்ளஸ் தேவானந்தா, பந்துல குணவர்த்தன, ஈ.பி.டி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்) வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, அமைச்சரின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குகேந்திரன், வேலணை பிரதேச சபை தவிசாளர் சிவராசா மற்றும் அமைச்சர்கள், பிரதியமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Related Posts