வேலணைப் பகுதியில் மின்மாற்றி நிறுவுவதற்காக வெட்டப்பட்ட குழியில் மனித மண்டையோடுகள் பல தென்பட்ட நிலையில் அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.
இன்று வெள்ளிக்கிழமை காலை குறித்த பகுதியில் மின்மாற்றி நிறுவுவதற்காக கிடங்கு வெட்டப்பட்டது என்றும், இதன்போது அதிலிருந்து சில மனித மண்டையோடுகள் வெளிக் கிளம்பின என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அந்த இடத்தை விட்டு வேறொரு இடத்தில் கிடங்கு வெட்டப்பட்டது. அதிலும் எச்சங்கள் தென்பட வேறொரு இடத்தில் மீண்டும் தோண்டியபோது அங்கும் மனித எலும்பு எச்சங்கள் வெளிவந்துள்ளன.
அதனையடுத்து அந்தப் பணிகளை இடைநிறுத்திய அதிகாரிகள் ஊர்காவற்றுறைப் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்ததுடன், நீதிமன்றுக்கும் தெரியப்படுத்தினர்.