வேலணைப் பகுதியில் பொதுவேட்பாளர் மைத்திரியை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளச் சென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரைக் கடுமையாக எச்சரித்த கும்பல் ஒன்று, அவர்கள் பயணித்த வாகனத்தையும் கற்களால் தாக்கி சேதப்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பி.ப. 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,
வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரெத்தினம் தலைமையிலான கூட்டமைப்பு குழுவினர் வேலணை, செட்டிபுலம் நேதாஜி சனசமூக நிலைய பகுதியில் தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது அங்கு இரு மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர், கூட்டமைப்புப் பிரதிநிதிகளை மிரட்டி, தகாத வார்த்தைகளால் திட்டி, வாகனத்தையும் அடித்துச் சேதப்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலை அப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு கட்சியின் உறுப்பினர்களே மேற்கொண்டனர் என அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.