Ad Widget

வேட்பாளர் பட்டியலில் இல்லாதவர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைய முடியாது! தேர்தல் ஆணையாளர் அதிரடி

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாதவர்களோ, தேசியப் பட்டியலில் பெயரிடப்படாதவர்களோ, நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படமாட்டார்கள் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேசியப் பட்டியலில் அந்தந்த கட்சிகளினால் பெயரிட்டு வெளியிடப்பட்டுள்ள உறுப்பினர்களைத் தவிர்ந்த வேறு எவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேசியப் பட்டியல் ஊடாக பதவி வகிக்க இம்முறை அனுமதிக்கப்படாது.

தேர்தல் சட்டத்திற்கு அமைய இந்த விடயம் குறித்த சட்டங்கள் இம்முறை கடுமையாக அமுல்படுத்தப்படும். தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்படாத மற்றும் தேர்தலில் போட்டியிடாத சிலர் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு தெரிவு செய்யப்படுவதனால், தேர்தல் ஆணையாளர் என்ற ரீதியில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.

எனவே இம்மறை தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் போது தேர்தல் சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

முன்னர் பசில் ராஜபக்ச தேர்தலில் போட்டியிடாமல் தேசியப்பட்டியலில் இடம்பெறாமல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார். தேர்தல் ஆணையாளரின் இந்த கடும் போக்கினால், மகிந்த ராஜபக்ச ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டாலும் கூட, பசில் ராஜபக்சவோ, கோத்தபாய ராஜபக்சவோ நாடாளுமன்றத்துக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Related Posts