Ad Widget

வெள்ள நிவாரண நிதிக்கான காலம் நீடிப்பு

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடமாகாண சபையால் வெள்ள நிவாரண நிதி சேகரிக்கப்படுவது எதிர்வரும் 30ஆம் திகதி வரை காலநீடிப்புச் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, வடமாகாண சபையால் நிதி சேகரிக்கும் நடவடிக்கை கடந்த 7 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான முடிவுத் திகதி கடந்த 20 ஆம் திகதி என அறிவிக்கப்பட்டது.

திணைக்களங்கள், நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், தாங்களும் நிதிப்பங்களிப்புச் செய்யவேண்டும் எனவும் தங்களுக்கான வேதனங்கள் 20 ஆம் திகதிக்கும் 30 ஆம் திகதிக்கும் இடையிலேயே நிதி கிடைக்கும் எனவும் குறிப்பிட்டமையால், காலத்தை 30 ஆம் திகதி வரையில் நீடிப்புச் செய்துள்ளோம்.

வெள்ள நிவாரண நிதிக்கு வடமாகாண சபையின் 38 உறுப்பினர்களுக்கு பங்களிப்புச் செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 4 ½ இலட்சம் ரூபாய் நிதி கிடைத்துள்ளது. வேறு இடங்களில் இருந்தும் நிதி வருகின்றது. சேகரிக்கப்படும் நிதியை, எமது சார்பில் ஒரு பிரதிநிதி இந்திய, தமிழகம் சென்று தமிழக முதலமைச்சரிடம் வழங்குவார். அல்லது தமிழக முதலமைச்சரின் நிதியத்துக்கு ஒன்லைன் மூலமாக அனுப்பப்படும் என்றார்.

மேலும்,சேகரிக்கப்படும் நிதி உரியவர்களிடம் கொண்டு போய் சேர்க்கப்படும். எவ்வித உதவிகளும் வேண்டாம் என்று யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதகர கொன்சலட் ஜெனரல் ஆ.நடராஜன் கூறியதாக வெளியாகிய செய்திகளில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை.

இந்த நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் கிழக்கு மாகாணத்தையும் சேர்த்துக்கொள்ளாமைக்கு மனம் வருந்துகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts