ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ மக்கள் மத்தியில் உரை!
நான் உங்கள் முன்னிலையில் வெற்றிலையுடன் வந்துள்ளேன். எமது தேர்தல் சின்னம் வெற்றிலை சின்னம்.. வெற்றிலை வெற்றியின் சின்னம். இந்த வெற்றியை அமோக வெற்றியாக்குவீர்கள் என்று வேட்பு மனு தாக்கலையடுத்து தேர்தல்கள் செயலகத்திலிருந்து மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வெளியேறிய ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ, ராஜகிரிய பகுதியில் கூடியிருந்த பெருந்திரளான மக்கள் மத்தியில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் பேசுகையில் கூறியதாவது-
இந்த வெற்றியை அமோக வெற்றியாக்குவீர்கள் என்று எனக்கு தெரியும். எமது கட்சியின் செயலாளர் இன்று எதிர்கட்சி பொது வேட்பாளராக போட்டியிடுகிறார். அதேநேரம் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் இன்று எமது பக்கம் வந்தவிட்டார். இது எமக்கு வெகு சுலபமான காரியம். ஐக்கிய தேசிய கட்சியின் சரிவு இன்று முதல் ஆரம்பமாகிறது.
தமிழ், முஸ்லிம், சிங்களம் ,கிறிஸ்தவம் ஆகிய சகல இன மக்களுக்கும் சுதந்திரமாக வாழும் உரிமையை பெற்றுக்கொடுத்தோம். இந்த வரலாற்றை நாம் என்றும் மறவோம். 2015 ஜனவரி 8ஆம் திகதியன்று உங்களது ஒத்துழைப்பை எனக்குத் தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
நான் இந்த நாட்டை அபிவிருத்திப்பாதைக்கு இட்டுச்சென்றுள்ளேன. இந்நாட்டில் ஸ்தீர தன்மையை கொண்டுவந்துள்ளேன். இதனை எவராலும் உடைத்தெறிய முடியாது. நான் யாருக்கும் சேறு பூச மாட்டேன். எந்தக்கட்சிக்கும் சேறு பூச மாட்டேன். நியாயமானதொரு தேர்தலையே நான் எதிர்பார்கிறேன்.
2015 ஜனவரி 9ஆம் திகதி வெற்றியை கொண்டாட தயாராகுமாறும், வன்முறைக்கு இடமளிக்காது பொறுமையுடன் செயல்படுமாறும் எனது ஆதரவாளர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். எமது கட்சியின் வாசல் கதவு இன்னும் திறந்தே உள்ளது. இந்த வாசலினூடாக எவரும் சுலபமாக உள்ளே வரலாம் எனவும் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ இங்கு பகிரங்க அழைப்பு விடுத்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரான அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, அமைச்சர்களான தினேஷ் குணவர்த்தன ,பெசில் ராஜபக்ஷ ,ஏ.எச்.எம்.பவுஸி உட்பட ஆளும் கட்சியைச்சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உட்பட லட்சக்கணக்கான மக்கள் இங்கு சமூகமளித்திருந்தனர்.