Ad Widget

வென்றது அவுஸ்திரேலியா

இலங்கை பதினொருவர் அணிக்கெதிராக கொழும்பு பி சரவணமுத்து மைதானத்தில் இடம்பெற்ற மூன்று நாள் பயிற்சியாட்டத்தில், இன்னிங்ஸ் மற்றும் 162 ஓட்டங்களால் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.

Inoke

இரண்டாம் நாள் ஆட்ட முடிவின்போது, தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த அவுஸ்திரேலிய அணி, ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 431 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், நேற்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தின்போது, இறுதி விக்கெட்டையும் இழந்து 474 ஓட்டங்களைப் பெற்றது.

இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 62 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது காணப்பட்ட ஸ்டீவ் ஓ கெவி, அவுஸ்திரேலிய அணியின் இன்னிங்ஸ் நிறைவுக்கு வரும்போதும் 78 ஆட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் காணப்பட்டார். ஜக்ஸன் பேர்ட் இறுதி விக்கெட்டாக 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இலங்கை பதினொருவர் சார்பாக ஷெகான் ஜெயசூரிய ஐந்து விக்கெட்டுகளையும் விமுக்தி பெரேரா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து, தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை பதினொருவர் அணி, 20.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 83 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, ஷெகான் ஜெயசூர்ய 29, அஸேல குணரட்ன 23 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக, முதலாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஸ்டீவ் ஓ கெவி, இரண்டாவது இன்னிங்ஸிலும் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு, நேதன் லையன், மிற்செல் ஸ்டாக் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இலங்கை பதினொருவர் அணி தமது முதலாவது இன்னிங்ஸில், அசேல குணரட்னவின் 58, அணித்தலைவர் மிலிந்த சிறிவர்தனவின் 53, சத்துரங்க டீ சில்வாவின் 49, தசுன் ஷானகவின் 39 ஓட்டங்கள் துணையோடு, சகல விக்கெட்டுகளையும் இழந்து 229 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

Related Posts