Ad Widget

வெகுஜன போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க தமிழ் சிவில் சமூக அமைப்பு தீர்மானம்!

யாழ்.பல்கலைகழக சமூகத்தின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழ் சிவில் சமூக அமைப்பு, நாளை செவ்வாய்க்கிழமை தொடக்கம் கையெழுத்துப் போராட்டம் ஒன்றையும் நடதத் தீர்மானித்துள்ளது.

தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் அமைந்துள்ள அரச சார்பற்ற அமைப்புக்களின் இணைய அலுவலகத்தில் நடைபெற்றது.

ezlil-rajan-tamil-civil-samuka-amaippu

இந்த ஊடக சந்திப்பிலேயே மேற்படி முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ் சிவில் சமூக அமையத்தின் இணைப் பேச்சாளர் எழில்றாஜன் மேலும் தெரிவித்தவை வருமாறு.

ஐ.நா. மனிதவுரிமைகள் கவுன்ஸிலின் சர்வதேச விசாரணை அறிக்கையை வெளிடக் கோரியும் இலங்கை அரசாங்கத்தின் உள்ளகப் பொறிமுறையை நிராகரித்தும் நாளை செவ்வாய்க்கிழமை யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நடத்தவுள்ள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு நாம் பூரண ஆதரவை வழங்கி நிற்கிறோம்.

அதேவேளை, சர்வதேச விசாரணையாளர்கள் இலங்கைக்குள் வந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் சாட்சியங்களைப் பதிவு செய்யவும், சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும், ஐ.நா சபையின் சர்வதேசப் பொறிமுறை ஊடாகவே தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என வலியுத்தியும் கையெழுத்துப் போராட்டம் ஒன்றை மேற்படி கவனவீர்ப்பு போராட்டத்தில் ஆரம்பித்து வைக்கவும் நாம் திட்டமிட்டுள்ளோம்.

நீதி நிலை நாட்டப்படுவதில் அக்கறையுள்ள சகல தரப்பினரும் இந்தப் போராட்டங்களில் கலந்துகொண்டு ஆதரவை வழங்கவேண்டும் என்றும் நாம் அழைப்பு விடுகின்றோம்.

ஜெனீவா அறிக்கை ஒத்திவைக்கப்பட்டமையை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். எனவே, செப்டெம்பருக்கு முதல் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் நேரடியாக எமது மக்களின் சட்சியங்களைப் பதிவு செய்யக் கோரியும் எமது மக்களின் விருப்பை வெளிப்படுத்தும் வகையிலும், வெகுசனப் பிரசாரத்தையும் தமிழ் சிவில் சமூகம் விரைவில் முன்னெடுக்கும்.

10 பெப்ரவரி 2015 அன்று நிறைவேற்றப்பட்ட வடக்கு மாகாண சபையின் இனப்படுகொலை தீர்மானத்தை தமிழ் சிவில் சமூகம் முழு மனதோடு வரவேற்கின்றது.

உள்ளக பொறிமுறையில் தமக்கு நம்ப்பிக்கையில்லை எனபதையும், இலங்கையில் நடந்தவை, நடந்து கொண்டிருப்பவை அனைத்தும் இனப்படுகொலைதான் என்ற தமிழ் மக்களின் நீண்டகால விளங்கிக் கொள்ளலையும் சர்வதேசம் புரிந்துகொள்ளவேண்டும்.

எனவே இவை குறித்து சர்வதேச விசாரணையொன்று மேற்கொள்ளப்படவேண்டும் என்பதையும், அத்தகைய ஒரு விசாரணை முறையாக நடைபெறுவதற்கு வசதியாக வடக்கு மாகாண சபையின் தீர்மானம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதையும் நாம் வலியுறுத்துகிறோம்.- என்றார்.

Related Posts