Ad Widget

வீதிகளை புனரமைக்க கோரி சங்கானையிலும் மூளாயிலும் கவனயீர்ப்பு போராட்டம்!!!

யாழ்ப்பாணம் மானிப்பாய் ஊடான காரைநகர் வீதியை புனரமைக்குமாறு கோரி சங்கானையில் செவ்வாய்க்கிழமை (நவ. 29) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பல வருடங்களாக குறித்த வீதி புனரமைக்கப்படவில்லை எனவும் மழை காலங்களில் வீதியால் போக்குவரத்து செய்ய முடியாத நிலைமை காணப்படுத்தாகவும் அதனால் வீதியை புனரமைத்து தருமாறு நீண்டகாலமாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையிலையே இன்று இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை வலி.மேற்கில் உள்ள வீதிகளை புனரமைக்குமாறு கோரிக்கை விடுத்து மூளாய் அரசடி சந்தியில் இன்று {29} செவ்வாய்க்கிழமை வீதி மறிப்பு கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

இன்று காலை 8.30 மணிக்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மோசமாகச் சேதமடைந்துள்ள யாழ்ப்பாணம் – மானிப்பாய் – காரைநகர் வீதி, மாவடி – மூளாய் வீதி, வட்டுக்கோட்டை – பொன்னாலை வீதி என்பவற்றை தற்காலிகமாகவேனும் புனரமைக்குமாறு இங்கு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இவ்வீதிகளில் அடிக்கடி விபத்துக்கள் இடம்பெற்று பலர் காயமடைந்துள்ளனர் எனவும் மக்கள் தெரிவித்தனர்.
நிறைமாதக் கர்ப்பவதிகள் மற்றும் தீவிர நோயாளர்களை இவ்வீதிகளூடாகக் கொண்டுசெல்லும்போது அவர்கள் வலியால் உயிரிழக்கக்கூடிய அபாயம் உள்ளது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

மழை காலங்களில் இந்த வீதிகளூடான போக்குவரத்து முற்றாக தடைப்படுகின்றது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் இவ்விடயத்தில் தீவிர கரிசனை எடுக்கவில்லை எனவும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

போராட்டத்தின் முடிவில் வடக்கு மாகாண ஆளுநர், யாழ்.அரச ஆகியோருக்கு முகவரியிடப்பட்ட கடிதங்கள் வலி.மேற்கு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. இதன் பிரதி வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.

Related Posts