Ad Widget

வீடமைப்பு – உட்கட்டுமான நடவடிக்கையை ஒருங்கே மேற்கொள்ளவும்! – நிதிக்குழு கூட்டத்தில் எடுத்துரைப்பு

வடக்கிலுள்ள 4500 ஏக்கர் காணிகள் மக்களிடம் எப்போது கையளிக்கப்படும் என்பதை உறுதியாக கூறமுடியாத நிலை காணப்படுவதால், தற்போது மீள்குடியமர்த்தப்பட்ட குடும்பங்களுக்கான வீடமைப்பு மற்றும் உட்கட்டுமான நடவடிக்கைகளை ஒரே நேரத்தில் முன்னெடுக்க வேண்டுமென யாழ்.மாவட்ட மேலதிக காணி அரசாங்க அதிபர் சுப்ரமணியம் முரளிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற நிதிக்குழுவின் கூட்டம் யாழ்.மாவட்ட செயலகத்தில் நிதிக்குழுவின் தலைவர் மு.சுமந்திரன் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

இதன்போது குறித்த நிதிக்குழுவின் கூட்டத்தில் கலந்துகொண்ட அரசாங்க அதிபர் சு.முரளிதரன், மீள்குடியேற்றம் தொடர்பாகவும், நிதி ஒதுக்கு உட்பட உட்கட்டமைப்பு தொடர்பாகவும் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“யுத்தத்தினால் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்திருந்த 1500 குடும்பங்கள் தற்போது வருகை தந்துள்ளனர். அவர்களின் தேவைகளை பூர்த்திசெய்து கொடுக்கவேண்டும்.

மேலும் இந்தியாவில் இன்னும் 80 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. அக்குடும்பங்களும் யாழில் வந்து குடியமர்வதற்கு உள்ளன. அவர்கள் தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

யாழ்.மாவட்டத்தில் இன்னும் 4500 ஏக்கர் காணிகள் இராணுவத்தின் பாவனையில் உள்ளன. தொடர்ந்துவரும் ஆண்டுகளில் இக்காணிகளும் விடுவிக்கப்படலாம்.

ஆனால் தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஒரே நேரத்தில் செய்துகொடுக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.

இதேவேளை யாழில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் 2900 பேர் இருக்கின்றனர். அவர்களுக்கும் தொழில்வாய்ப்பு வழங்கும்போது, அவர்களுக்கான சம்பளத்தின் 50 வீதத்தினை ஒதுக்கியிருக்கின்ற போதிலும், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு தொழில்களை வழங்க தொழில் நிறுவனங்கள் காணப்படவில்லை.

மேலும் தொழில் வழங்குவதற்காக புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தும், 90 பேரைக் கண்டுபிடித்துள்ளோம். ஆனால் அவர்களுக்கான சரியான வேலைவாய்ப்பினை வழங்கமுடியாத நிலைமை காணப்படுகின்றது.

எனவே, புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கான வேலைவாய்ப்பு மற்றும் அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்ற மாற்றுத்திட்டம் ஒன்றினை முன்வைக்க வேண்டும்” என சுப்ரமணியம் முரளிதரன் கோரிக்கை விடுத்தார்.

இதன்போது, இவ்விடயம் தொடர்பாக மாற்று யோசனைகளை ஆராய்ந்து முன்வைக்குமாறு நிதிக்குழுவின் தலைவர் சுமந்திரன் கேட்டுக்கொண்டார்.

Related Posts