Ad Widget

விவசாய அமைச்சரிடம் கண்ணீர் விட்டழுத இளம் பெண்கள்!

இராணுவத்தில் இணையுமாறு படையினர் தம்மை நிர்ப்பந்தித்து வருவதாகக் கிளிநொச்சியிலுள்ள இளம் பெண்கள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கண்ணீர் மல்க முறையிட்டுள்ளனர்.

ankaranewsn-vanni (1)

கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சி புழுதி ஆற்றிலிருந்து மாயவனூர் கிராமத்துக்கு ஏற்றுநீர்ப்பாசனம் மூலம் விவசாய நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்றும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் அந்தக் கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

குறித்த திட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளையுடன் அங்கு சென்றிருந்தார்.

புழுதி ஆற்றினைப் பயன்படுத்தி விவசாயம் மேற்கொள்வது தொடர்பில் ஆராய்ந்த அமைச்சர் அதன் பின்னர் மாயவனூர் கிராம மக்களுடனான சந்திப்பினை மேற்கொண்டு அந்தக் கிராமத்தின் குறை நிறைகள் தொடர்பில் கேட்டறிந்தார்.

ankaranewsn-vanni (2)

அதன் போது கண்ணீர் விட்டழுத அந்தக் கிராமத்தினைச் சேர்ந்த இளம் பெண்கள்,

இராணுவத்தினர் தம்மை இராணுவத்தில் இணையவேண்டும் அல்லது வட்டக்கச்சி விவசாயப் பண்ணையில் வேலை செய்யவரவேண்டும் என நிர்ப்பந்தித்துவருவதாகவும் தம்மால் படையினரின் அழுத்தங்களில் இருந்து மீள முடியவில்லை என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

இதற்குப் பதிலளித்த விவசாய அமைச்சர்,

வலுக்கட்டாயமாக படைச் சேர்ப்பில் பெண்களை ஈடுபடுத்துவதை ஏற்கமுடியாது. இலங்கை அரசாங்கம் போர்க்காலத்தில் அதிகமான இராணுவத்தினரை உள்வாங்கிய நிலையில் தற்போது இராணுவம் உப்பிப்போயுள்ளது. போருக்குப் பின்னர் இராணுவத்தின் தேவையில்லை என்ற நிலையில் இவ்வாறான கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் எதற்காக அரசாங்கம் ஈடுபடவேண்டும். இதனை ஒரு போதும் ஏற்க முடியாது என்பதுடன் இந்த நடவடிக்கையினை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

இதேவேளை வட்டக்கச்சியில் உள்ள விவசாயப் பண்ணை எமது விவசாயத் திணைக்களத்திற்கு சொந்தமானது. அதனை இராணுவம் ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு எமது பெண்களை அங்கு வேலைக்கு வருமாறு நிர்ப்பந்திக்கின்றது. விவசாயப் பண்ணை இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால் அங்கு வேலைக்குச் செல்வதற்கு பெண்கள் அஞ்சுகின்றனர். இந்த நடவடிக்கை அந்தப் பகுதி மக்களின் வறுமைக்கு ஒரு காரணமாகவும் அமைந்துள்ளது.

போர் முடிந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும் இதுபோன்ற தொடர் நெருக்கடிகளையும் தொந்தரவுகளையும் எமது மக்கள் எதிர்கொண்டே வருகின்றனர். இதன் காரணமாகவே இராணுவத்தினரை எமது பகுதிகளிலிருந்து வெளியேறவேண்டும் என நாம் தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்றோம்.

இராணுவத்தினர் வெளியேறுகின்றபோதே இவ்வாறான நெருக்கடிகளிலிருந்து எமது மக்கள் மீண்டெழுவதுடன் எமது வறுமைக்குட்பட்ட மக்களின் பொருளாதாரமும் மேம்பாடடையும் என்று தெரிவித்த விவசாய அமைச்சர், இது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் கவனத்துக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்தார்.

Related Posts