யாழ். கொடிகாமம் பகுதியில் நடைபெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று முன்தினம் மாலை 04.15 அளவில் நடைபெற்ற இந்த விபத்தில் கொடிகாமத்தைச் சேர்ந்த, மூன்று பிள்ளைகளின் தாயான சுதன் சுதா (வயது 35) என்பவரே பலியாகியுள்ளார்.
மேலும் இதன்போது உ.சுதர்சினி (வயது 20) எனும் பெண் படுகாயமடைந்துள்ளார்.
அவர் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, பலியான பெண்ணின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இரு பெண்களும் குடிநீர் எடுத்துக்கொண்டு வீதியோரமாக வீடு நோக்கி சென்றுகொண்டிருந்த போது, வேகமாக வந்த ஹயஸ் ரக வாகனம் அவர்கள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் ஹயஸ் வாகனத்தை அடித்து நொறுக்கியுள்ளார்கள்.
வாகன சாரதியை கொடிகாம பொலிசார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.