Ad Widget

விபத்தில் ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் தினேஸ்வரன் (வயது 26) எனும் இளைஞர் இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், அதேபிரதேசத்தைச் சேர்ந்த ஆரியரத்னா வசந்தன் (வயது 20) எனும் இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த இரு இளைஞர்களும் நேற்று புதன்கிழமை இரவு 7 மணியளவில் புதுக்குடியிருப்பு பிரதேசத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் வீதியில் நின்ற கட்டாக்காலி மாடு ஒன்றின் மீது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

இதன்போது குறித்த மோட்டர்ர சைக்கிள் திடீரென தீப்பற்றியுள்ளது. சுமார் 15 நிமிடங்கள் வரை மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் கடற்படை, பொலிஸார் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் முல்லைத்தீவு மாஞ்சோலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் தர்மலிங்கம் தினேஸ்வரன் (வயது 26) எனும் இளைஞன் இடையில் உயிரிழந்ததாக தெரிவித்த பொலிஸார், இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

Related Posts