Ad Widget

வித்யாவின் கண்ணிலிருந்த விந்தணுவை பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவு

யாழ். புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி லோகநாதன் வித்யாவின் சடலத்தின் கண் பகுதியில் இருந்து பெறப்பட்ட விந்தணுவை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம், திங்கட்கிழமை (15) உத்தரவிட்டுள்ளது.

இந்த கொலை வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் எஸ்.லெனின் குமார் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொலை செய்யப்பட்ட மாணவியின் சடலத்தின் கண் பகுதியில் இருந்து பெறப்பட்ட விந்தணு மாதிரியை சட்ட வைத்திய அதிகாரி, மேலும் ஒரு தடயப் பொருளாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இதற்கமைய இந்த விந்தணு மாதிரியை மரபணு பரிசோதனைக்காக, ஜின்டெக் நிறுவனத்துக்கு அனுப்பிவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்களிடமிருந்து ஏற்கெனவே பெறப்பட்டுள்ள மரபணுக்களுடன் அதனை ஒப்பீட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நீதவான உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மடிக்கணினி அலைபேசி மற்றும் டெப் ஆகியவற்றில், குற்றச்செயல் தொடர்பான காட்சிகள் அல்லது புகைப்படங்கள் இருந்தனவா என்பதை கண்டுபிடிக்குமாறு நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

எனினும், மொரட்டுவை பல்கலைக்ழகத்தினால் அதனை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளதாகவும் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சுட்டிக்காட்டப்பட்டது.

இதனையடுத்து குறித்த தடயப் பொருட்களை மேலதிக ஆய்வுக்காக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவுக்கு அனுப்பிவைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு விசாரணையை இம்மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், சந்தேகநபர்கள் 9 பேரையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

Related Posts