Ad Widget

வித்தியாவின் மரணத்துக்கு ராஜபக்‌ஷ குடும்பமே பொறுப்பு!

“வடக்கில் சமூகச் சீரழிவுகளை ஏற்படுத்தி இன்று அது விஸ்வரூபமாகி புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல், பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யும் நிலை ஏற்படுவதற்கான பொறுப்பை மஹிந்த ராஜபக்‌ஷவே ஏற்றுக்கொள்ள வேண்டும்” – எனக் குற்றஞ்சாட்டும் ஜனநாயக மக்கள் முன்னணியின் உப பொதுச்செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான சண்.குகவரதன்,

‘வடக்கின் வசந்தம்’ என்ற பெயரில் ராஜபக்‌ஷ குடும்பம் திட்டமிட்டு தமிழர் கலாசாரத்தைச் சீரழித்துள்ளது. அந்தப் பாவத்திற்கான சம்பளத்தை இறைவன் வழங்குவான் அது நிச்சயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சண். குகவரதன் மேலும் தெரிவித்திருப்பதாவது:-

“யுத்தத்தை முடித்துவிட்டோம், தமிழ் மக்களுக்கு விடுதலையை பெற்றுக் கொடுத்துவிட்டோம், வடக்குத் தமிழ் மக்களின் விடிவை வழங்கியவர்கள் நாமே என மார்தட்டிய மஹிந்த ராஜபக்‌ஷவும், அவரது குடும்பமும், அரசும் மறுபுறம் தமிழர்களின் சமூக கலாசாரத்தை திட்டமிட்டு சீர்குலைத்தன.

‘வடக்கின் வசந்தம்’ என்ற பெயரில் அங்கு தாராளமாக பியர் போத்தல்களையும் மதுபான போத்தல்களையும் கொள்கலன்களில் அனுப்பிவைத்து புதிய மதுபானங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கினார்கள். இளைஞர்களையும் யுவதிகளையும் நல்வழிப்படுத்துகிறோம், மகிழ்ச்சியாக வைத்திருக்கின்றோம் என்ற போர்வையில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி போதைப்பொருட்களை விநியோகித்தனர். உல்லாசப்பயணிகளுக்காக ஹோட்டல்களைத் திறக்கின்றோம் என்ற பெயரில் அந்த ஹோட்டல்களுக்குள் மசாஜ் நிலையங்களைத் திறந்து விபச்சார விடுதிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. சிறப்பான ஒழுக்கத்தைக் கொண்டிருந்த வடபகுதி தமிழ் மக்களின் வாழ்க்கையில் இவ்வாறு சமூகச் சீரழிவுகளை ஏற்படுத்தி மஹிந்த ராஜபக்‌ஷ தமிழர்களைப் பழிவாங்கினார்.

இன்று மஹிந்தவின் பழிவாங்கல் விஸ்வரூபமெடுத்துள்ளது. ஒவ்வொரு தாயும் தமது பிள்ளைகளின் சீரழிவுகளைப் பார்த்து இரத்தக்கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பாவம் ராஜபக்‌ஷவின் குடும்பத்தை சும்மாவிடாது. ஒவ்வொரு தாயும் வடிக்கும் இரத்தக்கண்ணீர் இவர்களுக்கு சாபமாக அமைவது நிச்சயமாகும்.

‘வடக்கின் வசந்தம்’ என்ற பெயரில் தமிழ்ச் சமூகத்தை சீரழித்த ராஜபக்‌ஷ குடும்பமும் அவர்களுக்கு வக்காளத்து வாங்கிய தமிழர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் அரசியல்வாதிகளையும் மக்கள் ஓரங்கட்டவேண்டும். அதேவேளை புங்குடுதீவு மாணவி வித்தியாவை – பாரம்பரியத்தைக் குழிதோண்டிப் புதைத்த காமுகர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

எமது தமிழ்ச் சமூகம் இந்தச் சீரழிவுகளைத் தடுப்பதற்கு அணிதிரளவேண்டும். மீண்டும் வடக்கில் எமது பாரம்பரிய ஒழுக்கத்தைப் பாதுகாக்க நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். சதிகாரர்களின் செயல்களையும், நாகரிகம் என்ற பெயரில் எமது இளைஞர்கள், யுவதிகள் சமூக சீரழிவுகளுக்கு சிக்குவதையும் தடுத்து எமது பாரம்பரியத்தையும் பாதுகாக்கவேண்டும்” – என்றும் சண்.குகவரதன் தெரிவித்துள்ளார்.

Related Posts