Ad Widget

விடுதலை வேண்டுமா குதியுங்கள் தேர்தலில்; அரசியல் கைதிகளுக்கு காட்டப்படுகிறது ஆசை

election-meeting-candidateவடமாகாண தேர்தலில் சுயேச்சைக் குழுவாக நின்று ஆதரவு வழங்கினால் உங்களை விடுதலை செய்வோம்” என சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் சிலரிடம் அதிகாரிகள் சிலர் ஆசை காட்டி பேச்சு நடத்தி வருகின்றனர் என நம்பகமாகத் தெரியவருகிறது.

கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னர் பொதுப் பணிகளில் ஈடுபட்டவர்களிடமே இந்த ஆதரவை தேடி வருகின்றது. குறிப்பாக கைதிகளாகவுள்ள ஆசிரியர்கள், கிராமசேவர்கள், கூட்டுறவுச் சங்கப் பணியாளர்கள், முன்னாள் அரசியல்வாதிகள் ஆகியோரிடமே அரசு பேரம்பேசத் தொடங்கியுள்ளது.

விரைவில் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் சுயேச்சைக்குழுக்களாக இவர்களை போட்டியிட்டு அரசுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அதற்கு உடன்படுபவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுவர் என்றும் கைதிகளுக்கு அரச அதிகாரிகள் கடந்த சில தினங்களாக ஆசையூட்டத் தொடங்கியுள்ளனர்.

இதன்மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளைச் சிதறடித்து, அந்தக் கட்சி பெறும் ஆசனங்களின் எண்ணிக்கையை குறைப்பதே அரசின் நோக்கமாக இருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

2010இல் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் சிலரை சுயேச்சைக்குழுக்களாக வடக்கில் அரசு களம் இறக்கியமை குறிப்பிடத்தக்கது.

Related Posts