Ad Widget

விடுதலைப் புலிகளின் பெயரைக் கெடுத்து விடாதீர்கள்! – முன்னாள் போராளிகளிடம் சுரேஸ் பிரேமச்சந்திரன் கோரிக்கை

முன்னாள் போராளிகள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தற்போதைய அரசியல் சூழலில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும், அவர்களுக்குத் தோல்வி ஏற்படுமாயின் அது விடுதலைப் புலிகளுக்கு தமிழ் மக்கள் மத்தியில் ஆதரவில்லை என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி விடும் என்றும் எச்சரித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

தற்பொழுது அரசியல் களநிலவரங்களைப் பார்க்கின்றபோது இனவாதத்தைத் தூண்டி அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்ட தரப்பினர் மீண்டும் அரசியலில் பிரவேசித்துள்ளனர். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளை முள்ளிவாய்க்காலில் முற்றாக அழித்து விட்டதாக மார்தட்டி கடந்த காலங்களில் தமது அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்கள். அதுமட்டுமின்றி முன்னாள் விடுதலைப் புலிப்போராளிகளை புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்வதாக சர்வதேசத்திற்கு ஒரு போலியான பிரசாரத்தை காட்டிக் கொண்டவர்கள் அவர்களுக்கு நடமாடும் சுதந்திரத்தையோ கருத்து வெளியிடும் சுதந்திரத்தையோ வழங்கியிருக்கவில்லை.

வடக்கிலிருந்து உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படாமைக்கும் ஒரு இராணுவ வீரர் கூட குறைக்கப்படாமைக்கும் விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கி விடுவார்கள் என்றே காரணம் கூறி வந்தனர். இவ்வாறான நிலையில் அதே அணியினர் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளனர். இவ்வாறான தருணத்தில் முன்னாள் விடுதலைப் போராளிகளைக் கொண்ட அணியொன்று பொதுத் தேர்தலில் போட்டியிடுவது என்பது இனவாதிகளுக்கும் புலிகளை மையமாக வைத்து அரசியல் செய்பவர்களுக்கும் ஏது நிலைகளை ஏற்படுத்திக் கொடுக்கும். என்றார்.

Related Posts