Ad Widget

விக்னேஸ்வரனின் கூற்று சந்தேகத்தை ஏற்படுத்துகிறது!! – கிளிநொச்சியில் மனோகணேசன்

தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தில் விக்னேஸ்வரனின் 2ஆம் வாக்கு அளிப்பது பற்றிய கூற்று சந்கேத்தை ஏற்படுத்துவதோடு பொதுவேட்பாளர் விடயத்தினை மலினப்படுத்துவதாகவும் உள்ளதென்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தமிழ்த் தேசிய மே தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, வடகிழக்கு சிவில் சமூக பிரதிநிதிகளிடம் 13ஐ முழுமையாக அமுல் செய்வேன் என்று என் முன்னிலையில் கூறினார். அதை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடம்பெறச் செய்வதாகவும் உறுதி அளித்தார்.

ஏனைய பிரதான சிங்கள வேட்பாளர்களான ரணில், அநுர ஆகியோரிடம் தமிழர்களுக்கான தீர்வை தங்கள் தேர்தல் விஞ்ஞாபனங்களில் பிரசுரிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

ஜனாதிபதி தேர்தலை பொதுவாக்கெடுப்பாக கருதி வடக்கு கிழக்கில் பொது வேட்பாளரைநிறுத்த தமிழ் கட்சிகளுக்கு உரிமை உண்டு! ஆனால் கடைசி நேரத்தில், ஒரு பெரும்பான்மை வேட்பாளருக்கு 2ஆம் விருப்பு வாக்கை வழங்க முடியும் என்று விக்கினேஸ்வரன் எம்பி தனது உரையில் கூறியுள்ளார். அந்தக் கூற்றானது சந்தேகங்களை ஏற்படுத்துவதோடு பொது வேட்பாளர் கோசத்தை மலினப்படுத்துகிறது.

ஆனால் பொது வேட்பாளர் விடயத்தில் தென்னிலங்கை தமிழர்களை சேர்க்காதீர்கள். அது வேறு தளம். வடக்கு,கிழக்கு இது வேறு தளம் என்பது தான் எனது நிலைப்பாடாகும்.

நான் வரலாறு முழுக்க மலையகத்தில் உரிமைக்கு குரல் கொடுத்து, வடகிழக்கில் உறவுக்கு கரம் கொடுத்துள்ளேன். அதனடிப்படையில் தான் கிளிநொச்சிக்கும் எனது கரம் நீட்டுவதற்கு வருகை தந்துள்ளேன்.

தற்போது, வடகிழக்கில் பெரும்சாவாலான விடயமாக காணப்படுவது இளைய தமிழ் தலைமுறை நாட்டை விட்டு வெளியேறுவதாகும். இதனால் தமிழர் சனத்தொகை குறைகிறது. இது ஆபத்தானது. கடந்த காலங்களில் மலையக தமிழர்கள் கிளிநொச்சி, முல்லை, வவுனியா, மாவட்டங்களில் வந்து குடியேறினார்கள்.

அன்று அவர்கள் இங்கே வராமல் இருந்திருந்தால் தற்போது வடக்கு, கிழக்கு தமிழர் சனத்தொகை கணிசமாக குறைந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். எதிர்காலத்தில் மலையக தமிழர் வன்னியில் வந்து குடியேற மாட்டார்கள். அவர்களுடைய வாழிடங்களில் அம்மக்களுக்கான கட்டமைப்பை தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்படுத்தி வருகிறது. ஆகவே வடக்கிலும், கிழக்கிலும் தமிழர் சனத்தொகை குறையாமல் பாதுகாத்து கொள்ளுங்கள்.

அது மிகவும் அத்தியாவசியமான விடயமாகும். அதேநேரம், தற்போதைய தமிழரசுக் கட்சியின் நிலைமையைக் கண்டு கவலை அடைகிறேன். நீங்கள் இங்கு(வடக்கு,கிழக்கில்) பலமாக இருந்தால் தான் நாம் அங்கே(வடக்கு,கிழக்குக்கு வெளியே) பலமாக இருப்போம்.

இதை நான் 20வருடங்களுக்கு முன் இங்கு வந்து சொன்னேன். 10 வருடங்களுக்கு முன்பும் இங்கு வந்து சொன்னேன். தற்போதும் சொல்கிறேன் நீங்கல் பலமடையும் வரையில் நான் கூறிக்கொண்டே இருப்பேன் என்றார்.

Related Posts