Ad Widget

விக்கி உட்பட முன்னாள் அமைச்சர்கள் மூவருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு திகதி அறிவிப்பு!

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மூவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் தீர்ப்பு எதிர்வரும் 13 ஆம் திகதி வழங்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.

விக்னேஸ்வரன், மாகாண முன்னாள் அமைச்சர்கள் கந்தையா சிவநேசன், அனந்தி சசிதரன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

வட மாகாண அமைச்சராக பா.டெனீஸ்வரனை மீண்டும் அமைச்சர் வாரியத்தில் இணைத்துக் கொள்ளுமாறு கடந்த வருடம் ஜூன் மாதம் 29 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளை வழங்கியது.

இந்தக் கட்டளையை நடைமுறைத்தப்படுத்த தவறியதால் அவர்கள் மூவருக்கும் எதிராக நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றில் தனியாக முன்வைக்கப்பட்டது.

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு மனு மீதான விசாரணைகள் இடம்பெற்று வந்தது. இந்த நிலையிலநேற்று (வியாழக்கிழமை) அந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் அழைக்கப்பட்டது.

இதன் போது மூவருக்கும் எதிரான குற்றச்சாட்டுத் தொடர்பான தீர்ப்பை வரும் 13 ஆம் திகதி வழங்குவது என மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஜனக்க டி சில்வா அறிவித்துள்ளார்.

குறித்த வழக்கானது முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts