Ad Widget

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திட்டத்திற்காக யாழ்.மாவட்டத்திற்கு 40 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

யாழ். மாவட்டத்திற்கு இம்முறை வாழ்வின் எழுச்சி முதலீட்டு அபிவிருத்தி திட்டத்திற்கென நாற்பது மில்லியன் ரூபாய் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மாவட்டத்திலுள்ள சகல பிரேதச செயலக பிரிவுகளினூடாகவும் மக்களினால் முன்மொழியப்பட்ட பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மேற்படி நாற்பது மில்லியன் மூலம் பாதை புனரமைப்பு, இணைப்பு வீதிகளை அமைத்தல், முன்பள்ளிகளை மேம்படுத்தல், சுகாதாரம் சம்பந்தமான மேம்பாடு, மீனவர் ஒய்வு மண்டபம் அமைத்தல், பாடசாலைகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தல், பயிற்சி வழங்கல், போதைப்பொருள் அடிமையாதல் தொடர்பான விழிப்புணர்வு , மீன் ஏலவிற்பனை மண்டபம் அமைத்தல், அறநெறி மற்றும் ஆன்மீக ஆராய்ச்சி மையம் அமைத்தல், பெண் தலைமைத்துவ குடும்ப பெண்களுக்கு தும்பு தரம் பிரித்தல் பெறுமதி பார்த்தல் தொடர்பான பயிற்சிநெறி வழங்கல் போன்ற மக்களால் முன்மொழியப்பட்ட திட்டங்களை மாவட்டத்தின் பதினைந்து பிரதேச செயலக பிரிவுகளிலும் செயற்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் வீட்டுக்கு வீடு கிராமத்திற்கு கிராமம் எனும் திட்டத்திற்கென பதினோரு மில்லியன் ரூபாய் மற்றும் பின்தங்கிய கிராமங்களின் ஆரம்ப சுகாதார நிலையங்களினை மேம்படுத்துவதற்கென ஒரு மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்றுள்ளதெனவும் இத்திட்டங்களை செயற்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts