Ad Widget

வாளுடன் கைதாகிய நான்கு சிறுவர்களையும் சீர்திருத்தப் பாடசாலையில் தடுத்து வைக்குமாறு உத்தரவு!

யாழ்ப்பாணம் கண்டி வீதியில் மடத்தடி சாந்தி பகுதியில் வாளுடன் கைது செய்யப்பட்ட நான்கு சிறுவர்களையும் 14 நாள்களுக்கு சான்று பெற்ற சீர்திருத்தப் பாடசாலையில் தடுத்து வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் கட்டளையிட்டார்.

யாழ்ப்பாண காவல்துறையினர் நேற்றிரவு 10 மணியளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மடத்தடிப்பகுதியில் , நின்ற சிலர் காபவல்துறையினரின் வாகனத்தை கண்டு சிலர் தப்பியோடியுள்ளனர்.

அவர்களை விரட்டிச்சென்ற காவல்துறையினர் நால்வரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஒருவரிடமிருந்த நீண்ட குடையை சோதனை செய்தபோது அதனுள்ளிருந்து வாளொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கைது செய்யப்பட்ட நால்வரும் 17 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நால்வரையும் காவல்துறையினர் யாழ் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர். அவர்களை 14 நாள்களுக்கு சான்று பெற்ற பாடசாலையில் தடுத்து வைக்குமாறு நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டார்.

Related Posts