Ad Widget

வான்படைத் தளத்தின் நுழைவாயிலை மறித்து முல்லை மக்கள் இரவு பகலாக போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டம் – கேப்பாப்பிலவு கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு கிராம மக்கள், தமது காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு ஆரம்பித்த தொடர் சத்தியாக்கிரக போராட்டம் இரவு பகலாக இன்று (வியாழக்கிழமை) மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.

கேப்பாப்பிலவு விமானப்படை தளத்தின் 2ஆவது நுழைவாயிலை மறித்து இம் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கிய மக்களின் காணிகளை ஆக்கிரமித்துள்ள படையினர், அங்கு ராணுவ மற்றும் விமானப்படை தளத்தினை அமைத்துக்கொண்டு மக்களை உள்நுழைய விடாமல் தடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இக்கிராமத்தின் ஒருதொகுதி காணியை நேற்று முன்தினம் விடுவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருந்த போதும் குறிப்பட்டவாறு விடுவிக்காத காரணத்தால் இம் மக்கள் சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

போராட்டம் நடைபெறும் இடத்திற்கு நேற்றைய தினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, எஸ்.சிவமோகன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் சென்று மக்களை சமரசப்படுத்த முற்பட்ட போதிலும், மீள்குடியேற்றத்திற்காக சுமார் 6 வருடங்களாக காத்திருக்கும் தாம் இனியும் பொறுமைகாக்க முடியாதென மக்கள் குறிப்பிட்டுள்ளதோடு, தமது காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு இப் போராட்டத்தை தொடர்கின்றனர்.

Related Posts