Ad Widget

வவுனியா நகர கொத்தணி; மேலும் 6 பேருக்கு தொற்று!!

வவுனியா நகர கோரோனா தொற்று கொத்தணியுடன் தொடர்புடையோரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மேலும் 6 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதன்மூலம் வவுனியா நகர கொத்தணியினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60ஆக உயர்வடைந்துள்ளது.

வவுனியா மாவட்டத்தின் நகர்ப் பகுதியில் உள்ள பஜார் வீதி, தர்மலிங்கம் வீதி மற்றும் மில் வீதிகளில் காணப்படும் வர்த்தக நிலையங்களில் கடமை புரிபவர்களுள் 54 பேருக்கு (08.01.2021) கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நேற்று 192 பேரிடம் மாதிரிகள் பெறப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. அவர்களில் 6 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை, வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் இருவருக்கு தொற்று உள்ளமையும் நேற்றையதினம் இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

Related Posts