Ad Widget

ரவுடிகளை ஓடவிட்டு வேடிக்கை பார்த்த பொலிஸார்!

வவுனியா, குருமண்காட்டில் பெண்களுடன் கீழ்தரமாக நடக்க முற்பட்ட ரவுடிக் கும்பலை தப்பியோட விட்டு பொலிஸார் வேடிக்கை பார்த்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியா, நெடுங்கேணியில் இருந்து வந்த தந்தை இரு புதல்வர்கள் மற்றும் 4 சகோதரிகள் குருக்கள் புதுக்குளத்தில் உள்ள தமது வீட்டிற்கு செல்வதற்காக குருமண்காட்டில் உள்ள பேருந்துத் தரிப்பிடத்தில் காத்திருந்துள்ளனர்.

எனினும் நீண்ட நேரமாக பேருந்து வராமையால் பெண்களுடன் நிற்பதில் அச்சம் கொண்ட வயதான தந்தையார் அங்கிருந்த முச்சக்கவண்டி தரிப்பிடத்தில் முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்த சென்றிருந்த சமயம் அங்கு அப்பகுதியால் மதுஅருந்திய நிலையில் சென்ற 10 பேர் கொண்ட இளைஞர் குழுவொன்று பேருந்து தரிப்பிடத்தில் நின்ற பெண்களுடன் கீழத்தரமாக நடக்க முற்பட்டுள்ளனர்.

அவர்களின் செயற்பாட்டை கண்டித்த அப்பெண்களின் சகோதரர்கள் இருவரும் சகோதரிகளை காப்பதற்காக அவர்களை தாம் பாதுகாத்துக் கொள்ள அவர்களை அக்கும்பல் சரமாரியாகத் தாக்கியுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 50 மீற்றர் துரத்தில் இருந்து பொலிஸ் காவலரனுக்கு ஓடிச்சென்று அப்பெண்கள் முறையிட்டதுடன் தம்மை தாக்கியவர்களையும் அடையாளம் காட்டி அங்கு கூடியவர்களின் உதவியுடன் மூவரை பொலிஸாரிடம் பிடித்தும் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து 119 அவசர பொலிஸாருக்கும் அழைப்பை ஏற்படுத்தி சம்பவத்தை தெரியப்படுத்திய நிலையில் சுமார் 20 நிமிடங்கள் கழித்து சம்பவ இடத்திற்கு அவசர பொலிஸார் வருவதை அவதானித்த ரவுடித்தனம் செய்த இளைஞர்கள் மூவரும் பொலிஸாரின் துணையுடன் தப்பி ஓடியுள்ளனர்.

இதனையடுத்து அங்கு கூடிய பெருமளவான மக்கள் பொலிஸாரின் செயற்பாட்டை கண்டித்ததுடன் அங்கு வந்த பொலிஸாருடனும் முரண்பட்டுக்கொண்டார்கள்.

இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவிக்கையில் –

“நாங்கள் திருமண வீடொன்றில் கலந்து கொண்டு விட்டு வந்தோம். எமது பாதுகாப்புக்காக எமது அண்ணன்கள் இருவரும் வந்திருந்தார்கள். எனினும் மதுபானம் அருந்திய 10 பேர் கொண்ட இளைஞர் குழு எமது அண்ணன்கள் இருவரையும் தாக்கியிருந்தது “அத்துடன் பொலிஸாரிடம் நாங்கள் அவர்களில் மூவரை பிடித்துக்கொடுத்தபோதும் பொலிஸார் அவர்களுடன் ஏதோ இரகசியம் கதைத்ததை நாம் அவதானித்தோம்.

அதன் பின்னர் அவசர பொலிஸார் வருவதை அவதானித்த காவலரணில் இருந்த பொலிஸார் எனது கண்ணுக்கு முன்பாக அவர்கள் மூவரையும் செல்லுமாறு தெரிவித்தார். அதில் ஒருவரது சீருடை இலக்கம் எமக்குத் தெரியும். நாம் பிடித்துக்கொடுத்து 20 நிமிடங்களுக்கு மேலாகியும் அவர்களிடம் இருந்து அடையாள அட்டை இலக்கத்தையோ ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் எச்செயற்பாட்டையும் பொலிஸார் மேற்கொள்ளாது அவர்களை தப்பி ஓட வைப்பதற்கே வழிபார்த்து நின்றார்கள்” – என்றார்.

Related Posts