Ad Widget

வழக்கை துரிதப்படுத்துங்கள் அல்லது தூக்கிலிடுங்கள்! – தமிழ் அரசியல் கைதி ஜனாதிபதியிடம் கோரிக்கை!

வழக்கை துரிதப்படுத்துங்கள் அல்லது என்னை தூக்கிலிடுங்கள் என தமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவதாசன் (வயது-63) ஜனாதிபதியிடம் பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “கனகசபை தேவதாசன்‌ (வயது-63) ஆகிய நான்‌ பயங்கரவாதத்‌ தடுப்புச்‌ சட்டத்தின்‌ கீழ் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக சிறை வைக்கப்பட்டிருக்கிறேன்‌.

கொழும்பு மேல்‌ நீதிமன்றில்‌ சட்ட மா அதிபரால்‌ எனக்கெதிராகத்‌ தொடுக்கப்பட்ட 110 619/12 மற்றும்‌ 110 5638/11 ஆகிய இரு வழக்குகளிலும்‌ முறையே 20 ஆண்டுச்‌ சிறை மற்றும்‌ ஆயுள்‌ தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டன.

இத்‌தீர்ப்பை எதிர்த்து நான்‌ மேன்முறையீடு செய்துள்ளதுடன்‌, இவ்‌வழக்குகளை விரைவில்‌ முடிவுக்குக்‌ கொண்டுவர விரும்பி, இரண்டிலும்‌ எனக்காக நானே வாதாடுகிறேன்‌.

ஆனாலும்,‌ மேற்படி 04 283/17 மற்றும்‌ 04 413/18 ஆகிய இரண்டு மேன்முறையீட்டு வழக்குகளும்‌ நீதி நடைமுறையின்‌ வீண்‌ தாமதம்‌ மற்றும்‌ கொரோனா வைரஸ்‌ பரவல்‌ காரணமாக முற்றாக முடங்கிவிட்டன.

இதன்‌மூலம்‌, நிரபராதி என நிரூபிக்கும்‌ வாய்ப்பு எனக்கு முற்றாக மறுக்கப்படுகிறதுடன் எனது‌ அடிப்படை உரிமை அப்பட்டமாக மீறப்படுகிறது.

இதனை விளக்கித்‌ தங்களுக்கு சிறையூடாக ஆறு மாதங்களின்‌ முன்பு‌ கடிதம்‌ அனுப்பினேன்‌. துரதிர்ஷ்டவசமாக, அதற்குப்‌ பதில்‌ இன்னமும்‌ வந்து சேரவில்லை. எனவே, இவ்விடயத்தை இன்று வேறுவழியின்றிப்‌ பகிரங்கப்படுத்துகிறேன்‌.

மேதகு ஜனாதிபதி அவர்களே, எனது இந்த இரண்டு மேன்முறையீட்டு வழக்குகளையும்‌ துரித விசாரணைக்குட்படுத்த உத்தரவிட்டு உதவுமாறும்‌ அல்லது இந்த இரு வழக்குகளிலும்‌ நான்‌ பிணைபெற ஆவன செய்துதவுமாறும்‌ கோருகிறேன்‌.

மேற்சொன்ன கோரிக்கையை நிறைவு செய்யும்‌ இயலுமை தங்களுக்கில்லை எனத்‌ தாங்கள்‌ கருதும்‌ பட்சத்தில்‌, அரசியல்‌ யாப்பில்‌ தங்களிற்குத்‌ தரப்பட்ட அதிகாரத்தைப்‌ பயன்படுத்தி, என்து தண்டனையை மரண தண்டனையாகத் தரமுயர்த்தி, ‘யுத்தக்‌ குற்றவாளி’ என என்னைப்‌ பிரகடனப்படுத்தி உடனடியாகவே பகிரங்கமாக என்னைத்‌ தூக்கிலிட உத்தரவிடுங்கள்‌” என கனகசபை தேவதாசன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தனது இந்த முடிவு தொடர்பாக‌ யாரும்‌ தன்னை ஆற்றுப்படுத்த முனைய வேண்டாம்‌ எனவும் தனக்கு நீதி வேண்டும்‌ அல்லது மரணம்‌ வேண்டும்‌ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts