இலங்கையிலுள்ள பிரதேச சபைகளுள் முதன் முறையாக ஆதனவரி கணணிமயப்படுத்தப்பட்ட பிரதேச சபை என்ற பெருமையைப் பெற்றுக் கொள்கின்றது வலிகாமம் தெற்கு பிரதேச சபை.
ஏசியா பவுன்டேசன் நிறுவனத்தின் அனுசரணையுடன் உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும் உதவி ஆணையாளர் ஆகியோரின் வழிகாட்டுதலில் துரித கதியில் கணணி மயப்படுத்தல் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று தெரிவித்துள்ளார் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.பிரகாஸ்.
இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ஏழாலை, சுன்னாகம், உடுவில் ஆகிய உப அலுவலகங்களையும் எமது பிரதேச சபையின் தலைமை அலுவலகத்துடன் இணைய வலையமைப்பில் ஒன்றிணைக்கப்பட்டு ஆதனவரி சம்பந்தமான தரவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
2014 தைத் திங்களிலிருந்து கணணி வலையமைப்பினூடாக வேலைகள் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன. பொதுமக்கள் மற்றும் வரிசெலுத்துவோர் இலகுவாகவும் விரைவாகவும் தங்கள் பணிகளை நிறைவு செய்து கொள்ளற் பொருட்டு மேற்படி வேலைத்திட்டம் சபையின் பூரண அரச அனுமதியுடன் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் உத்தியோகபூர்வ இணையத்தள வடிவமைப்பு வேலைகளும் முடிவுறும் தறுவாயில் உள்ளன. வெகு விரைவில் இவ் இணையத்தளமும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதனூடாக உலகெங்கும் வசிக்கின்ற எமது உறவுகள் எமது சபையின் தொழிற்பாடுகளை அறிந்து கொள்வதுடன் சபையுடனான தொடர்புகளையும் இலகுவாகப் பேண முடியும் என்றும் மேலும் தெரிவித்தார்.