Ad Widget

வறட்சியினால் வடக்கு, கிழக்கில் பெரும் பாதிப்பு

நாட்டில் நிலவும் வறட்சியினால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இது தொடர்பில் விஷேட கவனம் செலுத்த வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரயதர்ஷன யாப்பா, விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் நகர திட்டமிடல் மற்றும் நீர் முகாமைத்து அமைச்சர் றவூப் ஹக்கீம் ஆகியோருக்கு கடிதமொன்றை இராஜாங்க அமைச்சர் அனுப்பி வைத்துள்ளார்.

வறட்சியினால் ஒரு இலட்சத்து 50ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் வீழ்ச்சி கண்டுள்ளதால் விவசாய நிலங்கள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளன. குடிநீர் பிரச்சினையும் மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய வறட்சி தொடர்பாக விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டமொன்று கடந்த 13ஆம் திகதி நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவிலும் இதுவரை சுமார் 68ஆயிரம் ஏக்கர் விவசாய காணி அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் 13,164 விவசாயிகளும், நீர்ப்பற்றாக்குறை காரணமாக 76,199 பொது மக்களும் பாதிப்படைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணத்தை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts