Ad Widget

வரணி கொள்ளை: தாக்குதலுக்குள்ளான நபர் வழங்கிய வாக்குமூலத்தின் படி நால்வர் தேடப்படுகின்றனர்!!

“கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணியில் திருட்டுக் குற்றச்சாட்டில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட குடும்பத்தலைவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் நான்கு பேர் தேடப்படுகின்றனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், தாக்குதலுக்குள்ளாகிய நபர் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை நிறைவடைந்ததும் அவருக்கு எதிராக தாக்குதல் நடத்தியவர்களால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

வரணி இயற்றாளையிலுள்ள வீடொன்றில் கடந்த 4ஆம் திகதி கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது. அந்த வீட்டில் சுமார் 10 பவுண் தங்க நகைகளையும் 57 ரூபா பணத்தையும் கொள்ளையிட்ட கொள்ளையர்களில் இருவர், மதுபோதையில் தடுமாறியதால் அகப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தில் தப்பிச்சென்றவர் என்ற குற்றச்சாட்டில் பொது மக்களால் கடந்த சனிக்கிழமை குடும்பத்தலைவர் ஒருவர் பிடிக்கப்பட்டார். அவர் வீடொன்றில் வைத்தே பிடிபட்டார்.

அவருக்கு கொள்ளைச் சம்பவத்தையடுத்து கைது செய்யப்பட்ட இருவருக்கும் தொடர்புள்ளது என்று குறிப்பிட்டே மக்களால் பிடிக்கப்பட்டார்.

அந்த நபர் பொது மக்களால் நையப்புடைக்கப்பட்டார். பின்னர் அவரை கொடிகாமம் பொலிஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

அந்த நபர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். வைத்தியசாலையில் அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த நபரிடம் நேற்று வாக்குமூலம் பெறப்பட்டது. அதில் தன்னை வீட்டிலிருந்து கடத்திச் சென்று தாக்கியவர்கள் என நான்கு பேரின் பெயர்களை அவர் வழங்கினார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், ஏனையவர்களின் பெயர்களைத் தெரியாது எனவும் அவர்களை அடையாளம் காட்டமுடியும் என்றும் அந்த நபர் வாக்குமூலத்தில் தெரிவித்தார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

“அந்த நபரைத் தாக்கிய குற்றச்சாட்டில் நேற்றுமுன்தினம் ஒருவர் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார். அவரை பிணையில் விடுத்த நீதிமன்று சட்டத்தை தம் கையில் எடுத்த செயற்பட்ட ஏனையவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருந்த்து.

அதனடிப்படையில் தாக்குதலுக்குள்ளான நபர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் நான்கு பேர் தேடப்படுகின்றனர். அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டால் ஏனையோர் தொடர்பிலும் விவரம் கிடைக்கும்” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Posts