Ad Widget

வன்முறையில் ஈடுபட்ட மேலும் நால்வர் கைது

யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் வன்முறையில் ஈடுபட்ட சந்தேகத்தில் மேலும் நால்வரை சனிக்கிழமை (30) கைது செய்துள்ளதாக யாழ்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான நால்வரும் ஓட்டுமடப்பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறினர்.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்தன. இதன்போது வர்த்தக நிலைய உரிமையாளர்களை அச்சுறுத்தியமை, வங்கிகளுக்குள் புகுந்து அதன் செயற்பாடுகளுக்கு பங்கம் விளைவித்தமை, தனியார் கட்டடங்கள் மீது கல்வீசி தாக்கியமை போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களையே இவ்வாறு கைது செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைதான நால்வரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வரும் பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக வர்த்தக நிலைய உரிமையாளர்கள், மற்றும் வங்கிகளில் பதிவான சீ.சீ.ரீ.கமராவின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related Posts