Ad Widget

வன்முறையில் ஈடுபடத் திட்டமிட்டனர் என யாழில் கைதான இளைஞர்கள் பிணையில் விடுவிப்பு

வடக்கின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்து நல்லூரில் ஒன்றுகூடி வன்முறையில் ஈடுபடத் திட்டமிட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 10 இளைஞர்களை தலா ஒரு இலட்சம் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் விடுவிக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

நல்லூர் ஆலயச் சூழலில் உள்ள ஐஸ்கிறீம் கடை ஒன்றுக்கு அருகாமையில் வைத்து 10 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் கைதுசெய்யப்பட்டனர்.

இதையடுத்து, சந்தேகநபர்கள் அனைவரும் நேற்று (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

இதன்போது, “நல்லூரில் ஐஸ்கிறீம் கடை ஒன்றுக்கு அருகே ஒன்று திரண்ட காரணத்தைக் கூறமுடியாது காணப்பட்டமை மற்றும் வடக்கின் பல்வேறு இடங்களிலிருந்து ஒன்றுகூடி வன்முறைச் சம்பவம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டனரா என்பது தொடர்பாக விசாரணையை நடத்துவதற்கு சந்தேகத்தின் அடிப்படையில் 10 பேரும் கைது செய்யப்பட்டனர்” என பொலிஸார் அறிக்கையை மன்றில் சமர்ப்பித்தனர்.

யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ ஆகியோர் மன்றில் முன்னிலையாகி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதன் காரணம் தொடர்பாக சமர்ப்பணத்தை முன்வைத்தனர்.

இதன்பின்னர், தேர்தல் வேட்பாளர் ஒருவரின் அழைப்பின் பேரில் சந்தேகநபர்கள் நல்லூரில் கூடியிருந்தனர் என்றும் அவர்கள் எந்தவொரு வன்முறைக்கும் திட்டமிட்டிருக்கவில்லை எனவும் சந்தேகநபர்களின் சட்டத்தரணிகள் மன்றுரைத்தனர்.

இரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதவான் ஏ.பீற்றர் போல், அரசியல் நடத்துவதற்கு சுதந்திரம் உண்டு எனவும், ஆனால் கொவிட்-19 சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும் எனவும் அறிவுரை வழங்கினார்.

அத்தோடு, சந்தேகநபர்களை தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், வழக்கை வரும் ஜூலை 27ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Related Posts