வட மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தனுக்கு இனந்தெரியாத இரு நபர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர் என நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணியளவில் துன்னாலைப் பகுதியில் அவரை வழி மறித்தவர்களே கொலை மிரட்டல் விடுத்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-
பருத்தித்துறையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த சுகிர்தனை சிலர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்தனர். துன்னாலைப் பகுதியில் அவரை முந்திக் கொண்டவர்கள் “நீ எங்களுக்கு எதிராக செயற்படுகிறாய்… இனி உன்னை சுடுவம்” என்று கூறி மிரட்டினர் என சுகிர்தன் சொன்னார்.
வந்தவர்கள் இருவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தபோது அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு வழங்கிய ரக மோட்டார்சைக்கிளிலேயே வந்தனர் எனக் கூறப்படுகின்றது.
இந்த மிரட்டல் குறித்து சுகிர்தன் வட மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானத்துக்கு அறிவித்தார். அத்துடன் சம்பவம் நடந்த பொலிஸ் பிரிவான நெல்லியடி பொலிஸாருக்கும் முறைப்பாடு செய்தார்.