Ad Widget

வட்டு யாழ்ப்பாண கல்லூரி மைதான கொலைச்சம்பவம் யாழ்.மேல் நீதிமன்றில் தொடர் விசாரணை

வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியின் மைதானத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் வழக்கு விசாரணை யாழ் மேல் நீதிமன்றத்தில் தொடர் விசாரணையாக நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப்பாண கல்லூரிக்கும் இடையில் நடை பெற்ற கிரிக்கட் போட்டியின் போது ஏற்பட்ட குழு மோதலில் ஜெயரட்ணம் தனுசன் என்பவர் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலைச் சம்பவத்தில் சிவசண்முகநாதன் மதுஷன், இந்திரசீலன் பிருந்தாபன், ரமேஷ் வெண்டில்கரன், நேசரட்னம் கஜேந்திரன், நாகராஜா காந்தரூபன் மற்றும் சுந்தரலிங்கம் பிரகாஷ் ஆகிய 6 பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் யாழ். மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

சந்தேக நபர்கள் அறுவருக்கும் நீதிமன்றத்தினால் அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கில் 12 தடயப் பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் 16 பேர் சாட்சிகள் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டது.

இதன் போது குறித்த வழக்கு நேற்று விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது வழக்கை தொடர்விசாரணைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

எனினும் சம்பவம் நடைபெற்ற திகதிகள், கைதுகள் தொடர்பிலான விளக்கங்களை பூரணப்படுத்துவதற்காக வழக்கை ஒத்திவைக்குமாறு அரச சட்டத்தரணி நிசாந் கேட்டுக்கொண்டார்.இதற்கமைய வழக்கு இன்று வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Posts