Ad Widget

வட்டுக்கோட்டை பொலிஸாரின் நடவடிக்கைகளில் அதிருப்தி:மக்கள் விசனம்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மாற்றுத்திறனாளி பெண்ணிடம் தகாத முறையில் இருவர் நடந்துக்கொண்டுள்ளனர்.

கடந்த 17ஆம்திகதி வீட்டில் யாருமற்ற நிலையில் 45வயது மதிக்கத்தக்க நடக்க முடியாத மாற்றுத்திறனாளி பெண் தனித்திருந்த போது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இருவர் குறித்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துக்கொண்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து குறித்த பெண் கூக்குரலிட்ட நிலையில் வீட்டிலிருந்த தொலைபேசி ஒன்றினை திருடி சென்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பெண் வீட்டார் கடந்த 18ஆம் திகதி காலை பத்து மணியளவில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இருப்பினும் அந்த முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணிடம் வந்து விசாரணை மேற்கொள்ளவில்லை என வீட்டார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தமக்கு அயலவர்கள் குறித்த இருவரையும் அடையாளபடுத்தியுள்ள நிலையிலும் இதுவரை பொலிஸார் வருகை தரவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அதிகாரபூர்வ இலக்கத்திற்கு தொடர்பினை மேற்கொண்டு குறித்த விடயம் தொடர்பில் வினவிய போது..அதற்கு பதிலளித்த பொலிஸார், இப்பொழுதே குறித்த இடத்திற்கு செல்கின்றோம் என கூறியும் வட்டுக்கோட்டை பொலிஸார் அந்த பகுதிக்கு விரையவில்லை என சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணின் உறவினர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை அண்மைக் காலமாக வட்டுக்கோட்டை பொலிஸாரின் நடவடிக்கைகளில் திருப்தி இல்லாத நிலை காணப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Posts